Date : 26 June 2026, 9:28 pm
Posted By : ADMIN

தன்னை கடித்த விஷப்பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற சிங்கப்பெண் - ஒடிசாவில் சம்பவம்

தன்னை கடித்த விஷப்பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற சிங்கப்பெண் - ஒடிசாவில் சம்பவம்

மல்கங்கிரி (ஓடிசா): தன்னை கடித்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொண்டு பெண் ஒருவர் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. ஓடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள குறும்பாளி கிராமத்தை சேர்ந்தவர் மணிமா நாயக் (38). கடந்த 24-ம் தேதி இவர் அவரின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இரவு நேரத்தில் திடீரென பாம்பு ஒன்று வீட்டில் நுழைந்துள்ளது. அந்த பாம்பு உறங்கிக் கொண்டிருந்த மணிமாவை காலில் கடித்துள்ளது. இதனால் அலறி அடுத்து தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், பாம்பை கண்டதும் பதற்றப்படாமல் உடனடியாக அதனை வளைத்து பிடித்துள்ளார். மேலும், அந்த பாம்பை ஒரு பிஸ்கெட் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அடைந்துள்ளார். அதன் பின்னர், பாம்பு கடித்தது குறித்து வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவிக்க, அவர்கள் உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மதிலி சமூக சுகாதார மையத்தில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயர் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாம்பை ஏன் பிடித்து கையுடன் எடுத்து வந்தீர்கள் என அவரிடம் மருத்துவர்கள் கேட்டதற்கு, சிகிச்சைக்கு உதவியும் வகையில் என்னை கடித்தது சாதாரண பாம்பா அல்லது விஷ பாம்பா என்று மருத்துவர்கள் கண்டிறிய வேண்டி அவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாம்பு மீட்பு உதவி எண் நிறுவனர் சுபேந்து மல்லிக் கூறுகையில், “அந்த பெண் பாம்பை பிடித்து மருத்துவர்களிடம் கொண்டு வந்தது துணிச்சல் மிக்க செயலாகும். அவரை கடித்தது ரஸ்ஸல் விரியன் எனப்படும் கொடிய விஷப்பாம்பாகும். உலகளவில் பாம்பு கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்த பாம்புதான் முதன்மையான காரணம். இதுபோன்று பாம்பை கையினால் பிடிப்பது மிகவும் ஆபத்தானது. எந்த பாம்பு கடித்தது என கண்டறிய அதனை புகைப்படம் எடுப்பது போதுமானதாகும்” எனத் தெரிவித்தார். மணிமாவின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர் டாக்டர் பிரபுல்ல குமார் பெஹெரா, ”அவரின் உடலில் விஷம் தாக்கவில்லை, இருப்பினும் பாம்பு கடித்த இடத்தில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் உள்ளார். 2 அல்லது 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார். கடித்த பாம்பை துணிச்சலுடன் பெண் ஒருவர் மருத்துவர்களுக்கு காண்பிக்க எடுத்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.