Date : 26 June 2026, 7:25 pm
Posted By : ADMIN

தமிழ்நாட்டில் புதிதாக 469 துணை மின்நிலையங்கள்- வெள்ளை அறிக்கையில் அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 469 துணை மின்நிலையங்கள்- வெள்ளை அறிக்கையில் அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

சென்னை: தவெக ஆட்சியில் 2026 முதல் 2031ஆம் ஆண்டுக்குள் ஏற்கனவே பணிகள் நடைபெற்று வரும் 121 துணை மின்நிலையங்கள் உள்பட 469 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று மின்சரத் துறை நிர்மல் குமார் தெரிவிது்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், மின்சாரத் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை மின்சாரம், எரிசக்தி வளங்கள் துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார். அந்த அறிக்கையில், "மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு அதனை மின்நுகர்வோர்களுக்கு பிரித்து தருவதற்காக துணை மின்நிலையங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சாரத்தை தடை இல்லாமல் பிரித்து தர முடியும். தமிழ்நாட்டில் 765 கேவி திறன் கொண்ட 2 துணை மின் நிலையம், 400 கேவி திறன் கொண்ட 20 துணை மின்நிலையம், 230 கேவி திறன் கொண்ட 118 துணை மின்நிலையம், 110 கேவி திறன் கொண்ட 970 துணை மின்நிலையம், 66 கேவி திறன் கொண்ட 3 துணை மின்நிலையம், 33 கேவி திறன் கொண்ட 797 துணை மின்நிலையம் என 1,910 துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதில் 2021 முதல் 2026-ஆம் ஆண்டு வரை 765 கேவி திறன் கொண்ட 2 துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக ஆட்சியில் 2021 முதல் 2026 வரை 122 துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் 2026 முதல் 2031-க்குள் ஏற்கனவே பணிகள் நடைபெற்று வரும் 121 துணை மின்நிலையங்களையும் சேர்த்து, 469 துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளன. இதனால் அந்தப் பகுதிக்கு மின்சாரம் தடையின்றி வழங்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், "கடந்த திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் வருவாய் உயர்ந்தாலும், செலவுகளை மட்டும் உயர்த்திக் கொண்டனர். கடந்த 5 வருட திமுக ஆட்சியில் புதிதாக எந்த மின் திட்டமும் துவக்கப்படவில்லை. மின்துறை டெண்டர்களில் சுமார் ரூ.1028 கோடி ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் வெளியிட்ட டெண்டர்களில் சந்தேகத்திற்கு இடமான டெண்டர்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் மட்டுமல்லாமல் மின் கண்டெக்டர் கொள்முதலிலும் முறைகேடு நடந்துள்ளது. 9 இடங்களில் மின் கண்டெக்டர் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு மட்டுமே வெளியிட்டார். ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மின் கட்டணம் உயர்வுக்கு தமிழக அரசு கையெழுத்திடாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்த கூறினாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உயர்த்தமாட்டோம்.மின்சார வாரியத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களை ரூ.49,532 கோடியில் இந்தாண்டு திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். கடன் வாங்கித்தான் இந்த திட்டங்களை செய்ய உள்ளோம். தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வராமல் இருந்து இருந்தால், இந்ததுறை ஒரு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் தனியாருக்கு கொடுத்து இருப்பார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தில் நாங்கள் கொள்கை முடிவு எடுக்கவில்லை. ஏற்கனவே அதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளது. செல்போன் தொடர்பு இல்லாத இடங்களில் கணக்கெடுக்க முடியாது. மத்திய அரசு கூறியதால், 6 லட்சம் அரசு அலுவலகங்களில் மட்டும் ஸ்மார்ட் மீட்டர் போடுவதற்கு திட்டமிட்டு உள்ளோம். மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு தற்போது இருக்கும் பணியாளர்கள் போதுமான அளவு இல்லாத நிலையில், தற்போது உள்ள நடைமுறையே தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.