புதுடில்லி: ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாய்ச்சி மூன்று நாள் பயணமாக ஜூலை 1ல் இந்தியாவுக்கு வருகிறார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில், பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார நல்லுறவை வலுப்படுத்தும் 10 ஆண்டு செயல்திட்டம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அப்போது இந்தியா வரும்படி ஜப்பான் பிரதமருக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி மூன்று நாள் பயணமாக ஜூலை 1ல் இந்தியா வருகிறார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை நடைபெறும் 16வது இந்தியா - ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் சனே பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில், இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 10:30 pm
Posted By : ADMIN
இந்தியாவுக்கு மூன்று நாள் பயணம்; ஜூலை 1ல் வருகிறார் ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி