சென்னை, ஆக.8-
என்ஜினீயரிங் படிப்புக்கான 2-வது சுற்று கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை கல்லூரிகளில் 92,423 இடங்கள் நிரம்பி உள்ளன. இதுதவிர 22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவினருக்கு 3 சுற்றுகளாக தமிழ்நாடு முழுவதும் 423 கல்லூரிகளில் உள்ள 1,87,227 இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடக்கிறது.
இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி தொடங்கி 26-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. முதல் சுற்றில் 30,096 இடங்கள் நிரம்பி இருந்தன. இதனைத்தொடர்ந்து 2-வது சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 26-ந்தேதி ஆரம்பித்து, நேற்றுடன் முடிந்துள்ளது.
2-வது சுற்று நிறைவில், பொதுப்பிரிவில் 52,694 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் 9,633 இடங்களும் என மொத்தம் 62,327 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 2 சுற்று கலந்தாய்வு முடிவில் மொத்தம் உள்ள 1,87,858 இடங்களில் 92,423 இடங்கள் நிரம்பி உள்ளன. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி இடங்களில் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். மீதம் 95,435 இடங்கள் இருக்கின்றன.
இந்த 2 சுற்று கலந்தாய்வில் இதுவரை 22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலையும் உள்ளது. மேலும், 90 சதவீதத்துக்கும் மேல் 56 கல்லூரிகளிலும், 80 சதவீதத்துக்கு மேல் 82 கல்லூரிகளிலும், 50 சதவீதத்துக்கு மேல் 147 கல்லூரிகளிலும், 10 சதவீதத்துக்கும் குறைவாக 148 கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி உள்ளன.
இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் முதல் சுற்றில் இருந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், அதனுடன் தொடர்புடைய ஏ.ஐ., மெஷின் லேனிங், தரவு அறிவியல் போன்ற படிப்புகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்புகளில் சேரவே அதிக மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும், 2-வது சுற்றிலும் அதே நிலை நீடித்ததாகவும் தெரிகிறது.
மேலும், 2-வது சுற்றில் “கோர் என்ஜினீயரிங்'' படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பதையும் பார்க்க முடிவதாகவும், இதுதவிர, 994 பேர் முதல் சுற்றில் காத்திருப்பில் இருந்து 2-வது சுற்றில் படிப்புகளை தேர்வு செய்திருக்கின்றனர். அவ்வாறு தேர்வு செய்த 166 பேர் 190 ‘கட்-ஆப்’ மதிப்பெண் மேல் எடுத்தவர்களாக உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. வருகிற 20-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த கலந்தாய்வில் 1,01,589 மாணவ-மாணவிகள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.