கீழடி அகழாய்வு முறைகளில் குறைபாடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

கீழடி அகழாய்வு முறைகளில் குறைபாடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி:

தமிழகத்தின் கீழடியில் கடந்த 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறை வாயிலாக பெறப்பட்டுள்ளது என்றும், இந்த அறிக்கை துறை சார்ந்த நிபுணர்களின் பரிசீலனையில் உள்ளது என்றும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மேலும், கீழடி அகழாய்வு முறைகளில் குறைபாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், “கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்த பரிசீலனை நடைமுறைகள் அதன் பணிசார்ந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது. இந்த ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவுகள் தொடர்பாக குறை காண்பதற்கோ, அல்லது அந்த அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யும் நோக்கமோ இல்லை.


முதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கைகள் நிபுணர்களின் பரிசீலனையில் இருக்கிறது. கீழடி அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட முறைகள், காலவரிசை, விளக்கம், முன்னிலைப்படுத்துதல் மற்றும் விரிவான பகுப்பாய்வுகள் போன்ற அம்சங்களில் குறைபாடுகள் காணப்படுகிறது. இது தொடர்பான விவரங்கள் அகழாய்வில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


2014 முதல் 2017-ம் ஆண்டுகளுக்கு இடையே கீழடி பகுதியில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. 2018-ம் ஆண்டு முதல் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை தொடர்ந்து இந்தப் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. எனினும், இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்பான இறுதி அறிக்கை மாநில அரசிடம் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை” என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.


முன்னதாக, கீழடி​யில் நடத்​தப்​பட்ட ஆய்​வின் அறிக்​கை, மத்​திய தொல்​லியல் துறை​யிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், இந்த ஆய்வறிக்கையை அங்கீகரிக்​காமல், திருத்​தம் கோரி மத்​திய அரசு திருப்பி அனுப்​பியது குறிப்பிடத்தக்கது



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%