நியூயார்க்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், பதிலடி கொடுத்து அவற்றை உக்ரைன் மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார்.
இதனையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் (இந்திய நேரப்படி இரவு 12.30 மணியளவில்) நேரில் சந்தித்து பேச ஏற்பாடாகி உள்ளது.
இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளில் முதன்முறையாக இரு தலைவர்களும் நேருக்கு நேராக சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். அதனால், போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆங்கரேஜ் பகுதியில், பல்வேறு பகுதிகளிலும் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், ரஷியா இனி இருக்காது என்றும் உக்ரைனுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதியில் காணப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தனித்தனியாக விமானத்தில் வந்து சேர்ந்துள்ளனர். அப்போது, புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். இதன்பின்பு, இருவரும் ஆலோசனை நடைபெறும் பகுதிக்கு ஒரே காரில் ஏறி, புறப்பட்டு சென்றனர்.