Monday, 29 June 2026, 06:07 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:15:37 | Reporter: Admin
சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். தற்காலிக பதவியான இப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளும் நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்கு வகிப்பார். இப்பணி நியமனத்துக்கான நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவின் பெங்களூருவை சொந்த ஊராகக் கொண்டவர் ஆவர். அங்கேயே சட்டம் படித்து இருக்கக்கூடியவர். கர்நாடகாவில் பிறந்திருந்தாலும் இவருடைய தாய்மொழி தெலுங்கு என்று கூறப்படுகிறது. மேலும் இவருக்கு தாய்மொழியில் வெறும் பேச்சு வழக்கு மட்டுமே தெரிய வரும் என்றும் எழுதவும் படிக்கவும் தெரியாது எனக் கூறப்படுகிறது. மேலும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் இவை இரண்டும் சரளமாக பேச எழுத தெரியும் என சொல்லப்படுகிறது. இவருக்காக வழங்கப்பட்டிருக்கும் அரசாணையில், அவரது வீட்டு முகவரி, சென்னை கோட்டூபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் இவர், Prestige குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். மேலும் அந்த நிறுவனம், பல கோடி அமெரிக்க டாலர்களை சம்பாதிக்க மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. பின்னர், 2024ல்தான் இவர் கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் கேடி தே டேபில், டாக்ஸிக், ஜனநாயகன், கடக் சிங் ஆகிய படங்களை தயாரித்துள்ளது.மேலும் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆன ஆர் ஆர் ஆர் (RRR), அனிமல், கல்கி2898AD, தேவரா போன்ற படங்களை கேவிஎன் நிறுவனம் கர்நாடகாவில் விநியோகம் செய்துள்ளது. முதல்வர் விஜய் உடன் நெருக்கம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கடந்த மே 4-ம் தேதி வெளியானது. 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் முதன்மை கட்சியாக உருவெடுத்தது. இருந்தபோதிலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் இல்லாததால் தமிழக ஆளுநரை மூன்று முறை சந்தித்து விஜய் உரிமை கூறினார். அந்த வகையில் மே 8 தேதி ஆளுநருடன் சந்திப்பு நடைபெற்றபோது ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் கே நாராயணா, விஜய் உடன் இருந்தார் என்பது பேசுபொருளானது. அப்பொழுதே முதல்வர் விஜய்யின் ஆட்சி, அதிகாரத்தில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்ற அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அது தற்போது உண்மையாகி,அவர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.