Monday, 29 June 2026, 06:07 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:13:37 | Reporter: Admin
சென்னை: திருவள்ளூரில் அம்மோனியா வாயுக்கசிவு சம்பவத்தில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்த நிலையில், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த மேலும் இரு பெண் தொழிலாளர்கள் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21 திடீரென கூலிங் பைப்பிலிருந்து அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னையில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த தொழிலாளர்களில் நேற்று வரை 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புத்தபரி நாயக் என்ற பெண் தொழிலாளியும், ஒடிசாவைச் சேர்ந்த பிரீத்தி தேவி என்ற பெண் தொழிலாளியும் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. இதையும் படிங்க: பள்ளி சீருடையில் குத்தாட்டம்: தாய் கண்டித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் விபரீத முடிவு இதனிடையே, இந்நிறுவனத்கில் அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களில் தற்போது திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா, தனியார் மருத்துவமனைகள், சென்னை ஸ்டான்லி, அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என 4 மருத்துவமனைகளில் தற்போதைய நிலவரப்படி 55-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய மீட்கப்பட்ட தொழிலாளர்கள் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களில் ஒடிசாவை சேர்ந்த 59 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அதிகாரிகள் இன்று அனுப்பி வைத்துள்ளனர். 32 பெண்கள், 27 ஆண்கள் என 59 தொழிலாளர்கள் 2 பேருந்துகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா மாநில அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டு காலை 10 மணிக்கு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். எஞ்சிய பிற மாநில தொழிலாளர்களும், அவர்களது மாநில அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தடுத்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.