Monday, 29 June 2026, 06:07 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

ஈஷா யோகா மையத்தில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்; சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ வலியுறுத்தல்

Published On: 2026-06-26 23:12:37 | Reporter: Admin

News Image

சென்னை: ஈஷா யோகா மையத்தில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்ற ஊழியர் அந்த மையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதும், ஜூன் 22-ஆம் தேதியன்று நெல்லை மாவட்டம், மடத்துப் பட்டியைச் சேர்ந்த மலர்விழி (வயது 45) என்ற பெண் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈஷா யோகா மையத்தில் 2022ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பயிற்சிக்கு வந்த நிலையில் மர்மமான முறையில் காணாமல் போனார். பிறகு அங்கிருந்த ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அதேபோன்று 2016-ஆம் ஆண்டு பொறியியல் பட்டதாரிகளான தனது இரண்டு மகள்களை மூளைச் சலவை செய்தும், போதைப் பொருட்கள் கொடுத்தும், மொட்டையடித்தும் சித்தரவதை செய்யும் ஜக்கிவாசுதேவ் பிடியிலிருந்த தனது மகள்களை மீட்டுத் தர வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேராசிரியர் ஒருவர் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல்வேறு காலக்கட்டங்களில் தங்களது பிள்ளைகளை மூளைச் சலவை செய்து ஈஷா மையக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஈஷா யோகா மையத்தில் உள்ள மயான மேடையில் சட்டப்பூர்வமான தகவல்கள் அளிக்காமல் முறைகேடான வகையில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்ற புகார்களும் இந்த மையத்தின் மீது உள்ளது. இந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஒன்றிய அரசின் உச்சபட்ச தலைவர்களுடனும், ஆட்சியாளர்களுடனும், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்புகளில் உள்ளதால் வழக்கு விசாரணைகளை நீர்த்துப் போகச் செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வருவதாகவும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆன்மீகத்தின் பெயரால் ஈஷா மையத்தின் செயல்பாடுகள் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. எனவே, ஈஷா மையத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மரணங்கள், ஏற்கனவே நடந்துள்ள சந்தேக மரணங்கள் குறித்து விசாரிப்பதற்கும், ஏற்கனவே இந்த மையத்தின் மீது போதைப் பொருள், நில மோசடி, வன விலங்குகள் மீது தாக்குதல், மனித உடல் தகனம் உள்ளிட்டு அடுக்கடுக்கான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய முறையில் விசாரணை செய்து உண்மைகளை கண்டறிய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7