Wednesday, 01 July 2026, 12:07 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினேனா? தற்போதைய தவெக அமைச்சர் விளக்கம்

Published On: 2026-06-26 23:11:37 | Reporter: Admin

News Image

சென்னை: தற்போது தவெக அமைச்சராக உள்ள சரத்குமார், சில ஆண்டுகளுக்கு முன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக அண்மையில் வீடியோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில், "குழந்தையின் மருத்துவ தேவைக்காக மாத்திரையை தூளாக்கினேன்" என அமைச்சர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது, தற்போது மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள சரத்குமார், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டுள்ளது. அந்த வீடியோ காட்சியில் தற்போதைய தவெக அமைச்சர் சரத்குமார், மாத்திரை ஒன்றை தூளாக்கி, அதை ஏடிஎம் அட்டை மூலம் சீராக ஒதுக்குவது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவையே பலரும் பகிர்ந்து, அது போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடையது என கூறி தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், "அது போதைப்பொருள் அல்ல, தன்னுடைய குழந்தைக்கு கொடுப்பதற்காக மாத்திரையை தூளாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ" என சர்ச்சைக்கு விளக்கம் அளித்து அமைச்சர் சரத்குமார் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ. அப்போது, எனது குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆகையால், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை தூளாக்கிக் கொடுத்தேன். குழந்தையால் விழுங்க முடியாததால், அதை தூளாக்கி கொடுத்தேன். இதை தற்போது தவறாக கூறி பகிர்ந்து சிலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது மிகுந்த வேதனை அளிக்கும் வகையில் உள்ளது" என்றார். மேலும், இதுகுறித்து அமைச்சர் சரத்குமாரின் மனைவி ராதிகா கூறுகையில், "தற்போது தவறான புரிதலோடு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதற்கு உரிய விளக்கம் அளிப்பது எங்களது கடமை. ஆகையால், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டின்போது அவ்வளவு காவல்துறை பாதுகாப்பு இருந்தது. பொதுமக்களும் அங்கே அதிகம் இருந்தனர். இதுபோன்ற சூழலில் எப்படி போதைப்பொருள் பயன்படுத்த முடியும்?" என்றும் அவர் விளக்கம் அளித்தார். முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 26) போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், மக்களோடு மக்களாக அவரும் இணைந்து ஓடினார். முன்னதாக, 'விளையாட்டை எடு, போதையை விடு' என எழுதி கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். இத்தகைய சூழலில் தவெக அமைச்சர் குறித்த சர்ச்சையான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7