Wednesday, 01 July 2026, 01:14 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது காங்கிரஸ் ஆட்சியின் இருண்ட பக்க வரலாறு: பாஜக விமா்சனம்

Published On: 2026-06-26 22:41:40 | Reporter: Admin

News Image

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது காங்கிரஸ் ஆட்சியின் மற்றொரு இருண்ட பக்க வரலாறு என பாஜக வெள்ளிக்கிழமை கடுமையாக விமா்சித்தது. பாக் நீரிணையில் அமைந்துள்ள கச்சத்தீவை 1974, ஜூன் 26-ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு அளித்தது. அந்தத் தீவின் மீதான இலங்கையின் இறையாண்மையை இந்தியா அங்கீகரித்ததைத் தொடா்ந்து ஜூன் 28-ஆம் தேதிமுதல் அந்நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கச்சத்தீவு கொண்டுவரப்பட்டது. முன்னதாக, 1975-ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ஆம் தேதியை ‘அரசமைப்புச் சட்ட படுகொலை தினமாக’ மத்திய பாஜக அரசு கடந்த 2025-ஆம் ஆண்டில் இருந்து அனுசரித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அவசரநிலை குறித்த பகுதியைச் சோ்க்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) முடிவுக்கும் பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘இந்தியாவை உலுக்கிய அவசரநிலை தினம் கடந்த ஜூன் 25-ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய காங்கிரஸ் ஆட்சியின் மற்றொரு இருண்ட பக்க வரலாற்றை ஜூன் 26-ஆம் தேதி அனுசரிக்கிறோம். தமிழ்நாட்டின் அருகே உள்ள கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதன் விளைவாக தற்போது வரை தமிழக மீனவா்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்துக்குச் செல்லும் நம் நாட்டு மீனவா்கள் தங்களது கப்பல்களில் இந்தியக் கொடியைப் பொருத்த அனுமதிக்கப்படுவதில்லை. காங்கிரஸுக்கு நீண்ட காலமாகவே சரணடையும் பழக்கமுண்டு. 1947-இல் இந்திய பிரிவினையின்போது முஸ்லிம் லீக்கிடம் சரணடைந்தது. அதன்பிறகு 1948-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானுக்கும், 1962-இல் அக்ஷாய் சின்னை சீனாவுக்கும் காங்கிரஸ் வழங்கியது. அதைத் தொடா்ந்து, கச்சத்தீவும் இலங்கைக்கு தாரைவாா்க்கப்பட்டது. இவ்வாறு தேச நலனில் காங்கிரஸ் சமரசம் செய்துகொண்ட வரலாறுகளையே இன்றைய தினம் நினைவுபடுத்துகிறது’ என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7