Monday, 29 June 2026, 06:05 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:34:34 | Reporter: Admin
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியின் மூலம், இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், முதல் போட்டியிலேயே சோபிக்க தவறினார். தனது புதிய பயணத்தைத் தொடங்கிய நிலையில்,7 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்திய டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக 2023 டிசம்பர் 3 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் விளையாடி, 37 பந்துகளில் 53 ரன்கள் குவித்திருந்தார்.ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் தேசிய அணிக்குத் தேர்வாகியுள்ளார். அந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 168.81 ஸ்டிரைக் ரேட்டுடன் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உள்பட 498 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன் குவிக்கும் வீரராகத் திகழ்ந்தார். இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. தனது 31 வயது 202 நாட்களில் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிமுகமாகியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், மிக மூத்த வயதில் இந்திய டி20 கேப்டனாக அறிமுகமான 3-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இப்பட்டியலில் ஷிகர் தவான் (35 வயது 232 நாட்கள்) முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் (33 வயது 70 நாட்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அயர்லாந்துக்கு எதிரான இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து அணி தடுமாறியது. ஆனால் அதன் பிறகு விளையாடிய கேப்டன் டக்கர் 36 பந்துகளில் 50 ரன்களும், கெரத் டிலானி 32 பந்துகளில் 49 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா மட்டும் அதிரடியாக விளையாட சாம்சன், இசான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.