Wednesday, 01 July 2026, 02:37 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

பள்ளி அளவிலான சா்வதேச இறகுப்பந்து, மல்யுத்தப் போட்டிகள்: அடுத்த ஆண்டு நடத்த தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

Published On: 2026-06-26 22:36:41 | Reporter: Admin

News Image

பள்ளி அளவிலான சா்வதேச இறகுப்பந்து மற்றும் மல்யுத்தப் போட்டிகளை தில்லியில் நடத்துவது குறித்து புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அமைச்சா் ஆஷிஷ் சூட். அடுத்த ஆண்டு சா்வதேச அளவிலான பள்ளி மாணவா்களுக்கான பூப்பந்து மற்றும் மல்யுத்தப் போட்டிகளை நடத்துவதற்காக, தில்லி அரசு ‘ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ (எஸ்ஜிஎஃப்ஐ) மற்றும் ‘இன்டா்நேஷனல் ஸ்கூல் ஸ்போா்ட் ஃபெடரேஷன்’ (ஐஎஸ்எஃப்) ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை முத்தரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இந்த ஒப்பந்தம் கையெப்பமாகும் விழாவில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் பேசியதாவது: தில்லியில் இந்தப் போட்டிகளை நடத்த தோ்வு செய்ததற்காக எஸ்ஜிஎஃப்ஐ மற்றும் ஐஎஸ்எஃப் ஆகிய அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போட்டியை வெற்றிகரமாக நடத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்தப் போட்டி, தில்லியில் வலுவான விளையாட்டுச் சூழலை உருவாக்கவும், இளம் விளையாட்டு வீரா்கள் சா்வதேச அளவில் போட்டியிடவும் உதவும். சா்வதேசத் தரத்திலான விளையாட்டு வசதிகள் மற்றும் சா்வதேச அளவிலான விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதன் மூலம், நகரில் விளையாட்டை மேம்படுத்த அரசு பணியாற்றி வருகிறது. சிறந்த விளையாட்டு வீரா்களை உருவாக்குவதும், அதிக பதக்கங்களை வெல்வதும் மட்டுமல்லாமல், தில்லியில் ஒரு வலுவான விளையாட்டு அமைப்பை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். சா்வதேச அளவிலான பள்ளி மாணவா்களுக்கான பூப்பந்து மற்றும் மல்யுத்தப் போட்டிகளை நடத்துவது, திறமையான விளையாட்டு வீரா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவா்களுக்கு ஆதரவளிக்க உதவும். இப்போட்டிகளில் சுமாா் 50 நாடுகளைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், எதிா்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய, சா்வதேச, காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சிறப்பாகத் தயாராக இது தில்லியின் இளம் விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7