வந்தவாசி, ஜூன் 20:
வந்தவாசியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு உடல் நலமும் மன நலமும் சார்ந்த யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 'உடல் நலமும் மன நலமும்" சிறப்பு யோகாசன நிகழ்வு நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெ.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், சமூக ஆர்வலர் வி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் வெற்றிவேல் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக, தெள்ளார் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ரேகா ஸ்ரீ பங்கேற்று, யோகாசன முறைகளைப் பற்றியும், உடல்நலம் மனநலம் சார்ந்து மாணவர்கள் எவ்வாறு திகழ வேண்டும் என்பதை பற்றியும் விளக்கி பேசினார். மேலும் யோகாசன முறைகளை செய்த மாணவர்களுக்கு புத்தகப் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்வி அலுவலக மேற்பார்வையாளர் ஜெயக்கண்ணு, உடற்கல்வி ஆசிரியர் ஆ.இளம்பூரணண் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் மனவளக் கலை மன்ற நிர்வாகி ச. காசி பங்கேற்று உடற்பயிற்சி முறைகளையும், மாணவர்கள் செய்யும் மூச்சுப் பயிற்சி, தசைப் பயிற்சி போன்றவைகளையும், யோக முத்திரைகளையும் விளக்கிக் காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியாக பட்டதாரி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments yet. Be the first to comment!