ரூ. 71 கோடி செலவில் 3 நவீன நெல் சேமிப்பு வளாகம், 2 நவீன கிடங்குகள் : ஸ்டாலின் திறந்தார் 118 பேருக்கு பணி நியமன ஆணை
சென்னை, ஆக 22–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 23.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல்முறை கிடங்குகள், 30.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 7.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு நவீன கிடங்குகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். (மொத்த மதிப்பீடு : ரூ.60.85 கோடி)
மேலும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பணியாளர்களாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 63 நபர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 55 வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், மேலக்குயில்குடி உசிலம்பட்டி வட்டம், சீமானுத்து, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், கீழ்ப்புத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 23.27 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 12.500 டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல்முறை கிடங்குகள்;
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர், வாடிப்பட்டி வட்டம் குலசேகரன்பேட்டை, கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், டி.புடையூர் ஆகிய இடங்களில் மொத்தம் 30.38 கோடி ரூபாய் செலவில் 31,500 டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்;
திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட குனிச்சி கிராமம், அரியலூர் வட்டம், தேளூர் கிராமம் ஆகிய இடங்களில் மொத்தம் 60 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல்முறை கிடங்குகள், 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் 2 நவீன சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சேமிப்புக் கிடங்கு நிறுவனத் தலைவர் ப.ரங்கநாதன், கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.விஜயா ராணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.