சென்னை, ஆக.10–
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் மாபெரும் முகாமினை தொடங்கி வைக்கும் விதமாக, மேயர் ஆர்.பிரியா, மணலி மண்டலம், வார்டு -19க்கு உட்பட்ட மாத்தூர், எம்.எம்.டி.ஏ. பூங்காவில் முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு முதற்கட்டமாக மணலி, மாதவரம், மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் இம்முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு உலகளாவிய கால்நடை சேவைகள் (WVS) என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுப்பில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிராணிகள் வதைத்தடுப்புச் சட்டம் 1960ன் கீழ் உருவாக்கப்பட்ட நாய் இனக்கட்டுப்பாட்டு விதிகள் 2023க்குட்பட்டு, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் தற்போது புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு 14,678 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடப்பு 2025ஆம் ஆண்டு (7.8.2025 வரை) 9,302 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தலா 10 குழுக்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவும் தோராயமாக நாள் ஒன்றிற்கு சுமார் 100 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு நாளொன்றிற்கு தோராயமாக 3000 தெருநாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 நாட்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும்.
ரேபிஸ் தடுப்பூசி
மண்டலங்கள் மற்றும் வார்டு வாரியாக தெருநாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கே சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, நாய் பிடிக்கும் பணியாளர்கள் வலைகளை கொண்டு நாய்களை பிடித்த பின்னர் கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்படும். பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் பூசி அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படும். இப்பணியினை மேற்கொள்ளும் போதே வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தப்படும்.
பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் தன்னார்வலர்கள் தாங்கள் பராமரிக்கும் நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.