எங்கள் ஊர் சின்னமனூரானது தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1230 அடிஉயரத்தில் இருக்கின்றது.
எங்கள் ஊரின் சங்க கால பெயர் அரிகேசநல்லூர். தெலுங்கு நாயக்கர்களின் வருகைக்கு பின்பு அரிகேசநல்லூர் சின்னமனூர் என்று பெயர் மாற்றப்பட்டது. இராணி மங்கம்மாள் பாதுகாப்பாளாராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர்சின்னமனூர் என்று மருவியது . இங்கு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்
செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து
வருகின்றனர்.
சின்னமனூர் நகருக்கு தேனியிலிருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்து பயண வசதி உள்ளது. தேனியிலிருந்து கம்பம் மற்றும் குமுளி செல்லும் பேருந்துகள் இந்த ஊரின் வழியாகத்தான் செல்கின்றன. தேனியிலிருந்து நகரப் பேருந்து வசதியும் உள்ளது. கார் பயணம் செய்ய விரும்புபவர்கள் தேனியிலிருந்து கம்பம் நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூரை அடையலாம்.
இந்த நகரம் மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும், சின்னமனூர் சமீப காலமாக வாழைப்பழ விற்பனைக்கு பெயர் பெற்று சிறந்து விளங்குகிறது. சின்னமனூரில் இருபதுக்கும் மேற்பட்ட யூனிட்களில் இருந்து பதப்படுத்தப்பட்ட வாழைப்பழம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் முழுவதும் சின்னமனூரில்தான் அதிக நகைக்கடைகள் உள்ளன. சின்னமனூர் மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டத்தில் நான்காவது பெரிய நகரமாகவும், பரப்பளவில் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது.
• இந்நகரின் மேற்குப் புறமுள்ள செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் உருவான காலத்தில் இந்நகரைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்குச் சொந்தமான பெரிய தோ் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் தோ்த்திருவிழா பிரசித்தி பெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், உணவகங்களும் உள்ளன.
சின்னமனூர்அருகில் உள்ள முக்கியமான இடங்கள்
• சுருளி அருவி (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ)
• வீரபாண்டி மாரியம்மன் திருக்கோயில் (நகரிலிருந்து சுமார் 20 கி.மீ)
• ஹைவேவிஸ், மேகமலை எஸ்டேட் (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ)
• சோத்துப்பாறை அணை (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ)
• சின்ன சுருளி (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ)
• வைகை அணை (நகரிலிருந்து சுமார் 50 கி.மீ)
• தேக்கடி (கேரளா) (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ)
• மூணாறு (கேரளா) (நகரிலிருந்து சுமார் 100 கி.மீ)
• கொடைக்கானல் (நகரிலிருந்து சுமார் 70 கி.மீ)
சின்னமனூரில் பூலாந்தீஸ்வரர் திருக்கோயில், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், மாணிக்கவாசகர் திருக்கோயில், மாரியம்மன் திருக்கோயில் போன்ற கோவில்கள் உள்ளன.
1885 முதல் சின்னமனூரில் கிராம பஞ்சாயத்து அமைக்கப்பட்டது, பின்னர் 1947 முதல் டவுன் பஞ்சாயத்து ஆக தரம் உயர்த்தப்பட்டது. பழைய டவுன் பஞ்சாயத்து 01.04.77 முதல் III கிரேடு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 29.03.84 முதல் II தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
நகரின் கல்வி நிறுவனங்கள்
• நல்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
• கணக்கு வேலாயி அமராவதி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
• சிவகாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
• காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
• கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி
• மேயர் ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
சின்னமனூர் பகுதியில் கிடைக்கப்பெற்ற மூன்று செப்பேடுகளில் பாண்டிய மன்னர்களைப் பற்றிய புராணக்கதைகளும், பராக்கிரமச் செயல்களும் கூறப்பெற்றுள்ளது.இந்தச் செப்பேடுகளில் குறிக்கும் ஆணத்தி எனப்படுபவர் பாண்டிய மன்னரின் தலைமை அமைச்சரான குண்டூர்த்தாயன்சிங்கன் ஆவான். இச்செப்பேட்டை எழுதிவித்தவர்பாண்டிப்பெரும் பணைக்காரன் மகன் அரிகேசரி ஆவான். மூன்று செப்பேடுகளும் பராந்தக நெடுஞ்சடைன்யனால் அளிக்கப்பட்டது.
குருமூர்த்தி பொன்னுசாமி
ஆர். ஜே. பாளையம்