Print Date: Tuesday, 30 June 2026, 11:06 PM


News

வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு

Published On: 2026-06-26 21:35:47

News Image

சென்னை: வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 28 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை குழு தலைவர் வில்சன் தெரிவித்துள்ளார். Foreign Contribution (Regulation) Amendment (FCRA) Bill எனப்படும் 'வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட மசோதா 2026'-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை குழு தலைவரும், திமுக எம்.பியுமான வில்சன், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, "வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட மசோதா 2026-ஐ நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டமசோதாவில் பல மோசமான திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். FCRA உரிமம் பெற்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்தானாலோ, அது புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ அல்லது உரிமத்தை சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனமே சரண்டர் செய்தாலோ அதன் ஆளுகைக்கு உட்பட்ட சொத்துகள் வெளிநாட்டு நிதி ஆகியவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம், நிர்வகிக்கப்படலாம் அல்லது தேவைப்படின் அரசு அதை விற்பனை செய்யலாம் என இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதா இரண்டு அவையில் நிறைவேற்றி அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக வந்தால் இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர், ஜெயின் சமூகத்தினர், சொத்துகள் பறிபோகும். வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு லைசன்ஸ் கொடுக்கும். அந்த லைசன்ஸ் இல்லாதவர்கள் பணம் பெற்றால் சட்டப்படி குற்றமாகும். ஏற்கனவே 20 ஆயிரத்து 700 லைசன்ஸ்கள் ரத்து செய்து உள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. இது சட்டமாக வரும் போது மேல்முறையீடு செய்வது வேறு, ஆனால் தவறான முறையில் இந்த லைசன்ஸை கேன்சல் செய்தால் அதற்கு மேல் முறையீடு செய்யும் வகையில் எதுவும் குறிப்பிடவில்லை. நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பே மத்திய அரசிற்கு சென்று விடும். தற்போது இதற்காக சிறுபான்மையினர் மீதான கூட்டு நடவடிக்கை மன்றம் என்று உருவாக்கி உள்ளோம். இந்த மசோதாவை எதிர்த்து வரும் ஜூன் 28 ஆம் தேதி தேசிய பிராத்தனை நாளில் தேசிய உண்ணாவிரத நாளாக கடைபிடிக்க உள்ளோம். இந்த மசோதாவை எதிர்த்து ஜூலை 3 ஆம் தேதி போராட்ட நாளாக அறிவிக்க உள்ளோம்.அனைத்து நிறுவனங்களுடனும் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம். கையெழுத்து இயக்கங்கள் நடத்தவுள்ளோம். இந்த கையெழுத்துகளை மாவட்ட ஆட்சியர் மூலம் பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்ப உள்ளோம். இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இந்த மசோதாவை தெளிவு இல்லாமல் கொண்0டு வருகிறார்கள். மக்கள் விரோத மசோதாவை கொண்டு வருகிறார்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை அமைதியை சீர்குலைக்கும் மசோதா இது. எங்களுக்கு இந்த மசோதா தேவையில்லை. பொதுமக்கள் இந்த மசோதாவை எதிர்த்து போராட வேண்டும்." என்று வில்சன் தெரிவித்தார்.