Print Date: Wednesday, 01 July 2026, 08:58 AM


News

‘மக்களோடு என்றும் களத்தில் நிற்பேன்; மக்களின் நம்பிக்கையே எனது பலம்’ - ராகுல் காந்தி

Published On: 2026-06-26 21:06:49

News Image

வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை, மக்களின் நம்பிக்கையே தனது மிகப்பெரிய பலம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- “நான் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு இந்தியனின் குரலையும் அதிகார மையங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எனது அனைத்து நாட்களையும் அர்ப்பணித்தேன். நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, தேர்தல் மோசடிகளை அம்பலப்படுத்துவதாக இருந்தாலும் சரி, அல்லது அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருந்தாலும் சரி, நான் எல்லா களத்திலும் மக்களுடன் நின்றிருக்கிறேன், இன்றும் நிற்கிறேன், எப்போதும் மக்களோடு களத்தில் நிற்பேன். வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை, மக்களின் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம். இந்த பயணம் நீண்டது, ஆனால் எனது உறுதிப்பாடு மாறவில்லை. மக்களுக்காக நான் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.