Print Date: Wednesday, 01 July 2026, 08:59 AM
Published On: 2026-06-26 20:58:50
புது தில்லி: வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி குறித்த விவரங்கள் என்சிஇஆர்டி-யின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியல்களுக்கு சிறப்புத் தீவிர மறுஆய்வு செய்யுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு ஓராண்டுக்குப் பிறகு, பள்ளி பாடப்புத்தகத்தில் எஸ்ஐஆர் பற்றிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. போலிச் செய்திகள், தவறான தகவல்கள் மற்றும் மிரட்டல்கள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் பாரபட்சமற்ற தேர்தல்களை நடத்தியதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தை, என்சிஇஆர்டி பாராட்டியதோடு, பாடப்புத்தகத்திலும் இடம்பெறச் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலிலிருந்து இதுவரை சுமார் 6 கோடி பெயர்களை நீக்க வழிவகுத்ததும், எதிர்க்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கியதுமான எஸ்ஐஆர் பணி, ஓராண்டை நிறைவு செய்துள்ளதுடன், தற்போது 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிகார் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் 24 அன்று அம்மாநிலத்தில் முன்னோடித் திட்டமாக இந்த எஸ்ஐஆர் பணி தொடங்கப்பட்டது. இதன் விளைவாக வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட்டு, சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது வாக்காளர் பட்டியல்களுக்கு சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்தும் என்சிஇஆர்டி ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எஸ்ஐஅர் குறித்த ஒரு பகுதியை சேர்த்துள்ளது. முதல் முறையாகப் புத்தகத்தில் எஸ்ஐஆர் குறித்து தனி அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.