Print Date: Wednesday, 01 July 2026, 10:30 AM
Published On: 2026-06-26 20:44:52
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிமுக-வில் இருந்து விலகினார். அதிமுக-வில் இருந்து விலகிய விஜயபாஸ்கர் திமுக-வில் இணைவாரா? அல்லது தவெக-வில் இணைவாரா? என்ற கேள்வி வலுவாக எழுந்தது. திமுக-வில் அவருக்கு உள்ளூர் முக்கிய கழக நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் செல்லப்பாண்டி தரப்பு எதிர்ப்பைத் தெரிவிக்கவே அவர் தவெக-வில் இணைவதற்கே வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தது. அதற்கான நடவடிக்கையிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தொடக்கத்தில் தவெக-வில் இருந்து அவருக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டாலும் தற்போது அவரை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிக கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். அவர் மட்டுமின்றி மேலும் சில நிர்வாகிகளும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். விஜயபாஸ்கர் மிகவும் செல்வாக்கான நபராக திகழ்வதால் அவர் எந்த கட்சியில் இருந்தாலும் அவர் மீதான கவனம் தனியாக இருக்கும். அந்த வகையில், அவர் தவெக-வில் இணைந்தால் தாங்கள் ஓரங்கட்டப்படலாம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் கருதுவதாக கூறப்படுகிறது. மேலும், விஜயபாஸ்கரின் செல்வாக்கு காரணமாக தங்களது செல்வாக்கு குறையலாம் என்றும் கருதுகின்றனர். இதுமட்டுமின்றி தவெக முற்றிலும் புதிய கட்சி என்பதாலும் திமுக, அதிமுக-விற்கு மாற்றாகவே தவெக-வை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதாலும் தொடர்ந்து அதிமுக-வினரை அதிகளவு தவெக அரவணைப்பது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உள்ளிட்ட பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இதுமட்டுமின்றி, விஜயபாஸ்கர் மீது குட்கா புகார் குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவரை கட்சியில் சேர்த்தால் அது தவெக-விற்கு பின்னடைவை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், அவர் தவெக-வில் இணைந்தால் விராலிமலையில் மீண்டும் அவருக்கே வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கி அவர் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும், அவ்வாறு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால் குட்கா புகார் உள்ள ஒரு நபரை அமைச்சராக்குவது தவெக-விற்கே பெரும் பின்னடைவை உண்டாக்கும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் அதிமுக-வில் இருந்து விலகி ஒரு வாரமாகியும் தற்போது வரை எந்த கட்சியிலும் இணைய முடியாமல் விஜயபாஸ்கர் தவித்து வருகிறார். அவர் தவெக-வில் விஜய் முன்னிலையில் 5 ஆயிரம் பேருடன் இணைவதற்காக எடுத்த முடிவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகளும் கை விரித்துவிட்ட நிலையில், விஜயபாஸ்கர் அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.