Print Date: Wednesday, 01 July 2026, 12:52 PM
Published On: 2026-06-26 19:58:56
இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல் - File photo ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ - EPFO) இணையதளம், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வருங்கால வைப்புநிதியிலிருந்து (பிஎஃப் - PF) பணம் எடுக்கவோ, முன்பணம் பெறவோ அல்லது பிற கோரிக்கைகளைச் செயல்படுத்தவோ முடியாது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்புநிதியை மாதம்தோறும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மென்பொருள் மற்றும் தரவுத்தளம் மேம்படுத்தும் பணிகளுக்காக இன்று நள்ளிரவு 12 மணிமுதல் ஜூன் 28 நள்ளிரவு 11.59 மணிவரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அனைத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் வருங்கால வைப்புநிதி சேவைகள் தொடர்பாக எவ்வித கோரிக்கையையும் உறுப்பினர்களால் செயல்படுத்த முடியாது. இந்த காலகட்டத்தில் முன்பு கோரிய கோரிக்கையின் அடிப்படையில் முன்பணமும் வழங்கப்படாது. இருப்பினும், மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன் முன்பு எழுப்பப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக முன்பணம் உறுப்பினர்களின் கணக்குகளில் வரவுவைக்கப்படும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சேவைகளில் வேகம் மற்றும் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 29, அதிகாலை 12 மணிமுதல் மீண்டும் தளம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.