Print Date: Wednesday, 01 July 2026, 12:53 PM


News

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?

Published On: 2026-06-26 19:55:57

News Image

தில்லியிலிருந்து அமிருதசரஸ் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையிறங்க காத்திருந்த நேரத்தில், பாகிஸ்தான் வான் வெளிக்குள் சென்று வந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 22-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவிக்கத் தவறிய அதிகாரிகள், விமானிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தில்லியிலிருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானம், அமிருதசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது 'கோ-அரவுண்ட்' (go-around) எனப்படும் மறுசுற்று நடவடிக்கையை மேற்கொண்ட ஏர் இந்தியா விமானம், 15 நொடிகள் பாகிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அமிருதசரஸ் விமான நிலையத்தில் பறவை மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து ஓடுபாதையை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால், தில்லியிலிருந்து அமிருதசரஸ் வந்த விமானம், தரையிறங்க அணுகும்போது சிறிது நேரம் காத்துக்கொண்டிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவலின்படி, தரையிறங்குவதற்கான அணுகுமுறையின்போது ரேடார் வழிகாட்டுதலின் கீழ் இருந்த அந்த விமானம், சிறிது நேரம் பாகிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைந்தது. இந்த நிகழ்வு பாகிஸ்தான் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அந்த விமானம் டெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டு அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவிக்காததற்காக, அமிருதசரஸில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மற்றும் விமானிகள் மீது இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.