Print Date: Wednesday, 01 July 2026, 12:54 PM


Sports

திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு

Published On: 2026-06-26 19:46:58

News Image

CM Vijay Marathon: சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் முதலமைச்சர் விஜய் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியையும் ஏற்றார். சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்டாட் run ஸ்டாப் drugs போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். சென்னை, காமராஜர் சாலை, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் முன்னிட்டு நடைபெறும் "ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026"யை முதலமைச்சர் தொடங்கி வைத்து, கலந்து கொண்டார். முன்னதாக மேடையில் இருந்த பலகையில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான வாசகத்தையும் எழுதினார். மாரத்தானை தொடங்கி வைத்ததோடு போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய உடையை அணிந்தபடி முதலமைச்சர் விஜய் மாரத்தானிலும் பங்கேற்றார். சுமார் 6 கிலோ மீட்டருக்கும் அதிகமான இந்த ஓட்டத்தில் முதலமைச்சர் உடன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், வெங்கட்ராமன் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். அப்போது சாலையின் இருபுறமும் கூடி நின்று ஆதரவளித்த பொதுமக்களை நோக்கியும் முதலமைச்சர் கையசைத்து நன்றி தெரிவித்தார். ஓட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்து இருந்தனர். ஓட்ட பந்தய தூரத்தில் பாதி வரை ஓடி மாரத்தானை முதலமைச்சர் விஜய் பூர்த்தி செய்து கொண்டார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாகவும், அதன் காரணமாகவே பெரும்பாலான குற்றசம்பவங்கள் நிகழ்வதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டு வந்து சட்ட-ஒழுங்கு நிலைநாட்டப்படும் என முதலமைச்சர் உறுதியேற்றுள்ளார். அந்த வகையில் தான் கோயில் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு அருகில் இருந்து 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது போதைப்பொருள் மாரத்தானை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்ததோடு, பொதுமக்களிடையே அதிகப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தானும் பங்கேற்றுள்ளார். காவல்துறை மூலமும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதையும் படியுங்கள்: TN Weather Update: சென்னையில் கனமழை? தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை தமிழக அரசு விளையாட்டை சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாகக் கருதி செயல்பட்டு வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போதைப்பொருளில்லாத தமிழகம்’ என்ற உயரிய இலக்கை அடையும் வகையில் தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டு கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இது குறித்த விழிப்புணர்வு பாடலை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்