Print Date: Wednesday, 01 July 2026, 03:26 PM
Published On: 2026-06-26 19:15:00
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட காணிக்கைகளின் கணக்கு வழக்குகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக 6 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தனியார் தணிக்கை நிறுவனம் எச்சரித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு ரொக்கமாக மட்டுமே சுமார் 3,500 கோடி ரூபாய்க்கு அதிகமான காணிக்கை கிடைத்துள்ளதாகம திப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தங்கம்,மற்றும் வைர நகைகளும் வெள்ளிப் பொருட்களும் பெருமளவில் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளன. தற்போது, இந்தக் காணிக்கைப் பணம் மற்றும் நகைகள் முறையாகக் கணக்கில் காட்டப்படாமல் அறக்கட்டளை மற்றும் கோயில் ஊழியர்களால் களவாடப்பட்டுளதாக எழுந்துள்ள முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அறக்கட்டளை தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே 2020 நவம்பரில் ஒரு தனியார் தணிக்கை நிறுவனம் இதன் நிதி நிர்வாகம் குறித்து எச்சரித்திருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. அறக்கட்டளையின் நிர்வாக முறை மிகவும் தொழில் முறை அற்றதாக இருப்பதாகவும், வரவு-செலவுகளைக் கண்காணிக்க முறையான நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றும் தணிக்கை நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த எச்சரிக்கையை அறக்கட்டளை நிர்வாகம் அலட்சியப்படுத்தி, கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித நெறிமுறைகளையும் அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.