Print Date: Wednesday, 01 July 2026, 04:55 PM
Published On: 2026-06-26 18:40:03
வெண்புள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில், உடலில் ஏற்படும் வெண்புள்ளிகள் தொடுதலின் மூலமோ, தலைமுறை வழியாகவோ பரவாது என விளக்கப்பட்டது. மதுரையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று அமெரிக்கன் கல்லூரியில் உடல் நலம், சுகாதாரத் துறை, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து வெண்புள்ளிகள் விழிப்புணர்வு தினத்தை நடத்தின. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர்கள் டெபோரா ஞானசெல்வம், ராஜேஷ், ஜான் லிவிங்ஸ்டன், நோடல் அதிகாரி பியூலா ரூபி கமலம் மற்றும் தொழில் கல்வி படிப்பின் இயக்குநர் குணசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுரைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ். தினகரன் கலந்துகொண்டு, வெண்புள்ளிகள் குறித்தும், சருமத்திற்கு பழுப்பு நிறத்தை ஏற்படுத்தக்கூடிய மெலனோசைட்டுகள் குறித்தும் விளக்கமளித்தார். வெண்புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஓவியம் வரைந்தும் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், திருமங்கலம் பள்ளித் தலைமையாசிரியை விஜயலட்சுமி வெண்புள்ளிகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.