Print Date: Wednesday, 01 July 2026, 05:56 PM


News

கூட்டணியே தேவை இல்லை என்பதை விரைவில் பரிசீலிப்போம்: மு.க. ஸ்டாலின்

Published On: 2026-06-26 18:24:05

News Image

கூட்டணியே தேவை இல்லை என்பதை விரைவில் பரிசீலிப்போம் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் – காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற திமுக முன்னாள் அமைச்சர் உ. மதிவாணனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், “அண்ணா ஒரு முறை சொன்னார். தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரைச் சூட்டி இருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் இது போதும். எனவே, நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சொல்லும் வரை, என்னுடைய பெயர் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதுபோன்று, மகளிர் உரிமைத் திட்டம் இருக்கும் வரைக்கும் இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர். இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்கலாம். இங்கே நம்முடைய துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா பேசுகிறபோது, கூட்டணி பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். எப்போதுமே கலைஞர் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர்களாகத்தான் செல்வார்களே தவிர, கலைஞர் இதுவரை விட்டது கிடையாது. அதேபோன்றுதான் நானும் அவர் வழி நின்று, எந்தக் கூட்டணியாக இருந்தாலும் விடமாட்டேன். ஆனால் அவர்களாகச் சென்றால், நான் ஒன்றும் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய கடமை. ஆனால் இன்றைக்கு இருக்கும் மக்கள் எல்லாம், கூட்டணியே தேவை இல்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம். மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்” வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்” என்றார். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.