Print Date: Wednesday, 01 July 2026, 05:55 PM
Published On: 2026-06-26 18:14:06
இந்திய பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் மெலோனி - கோப்புப் படம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது தலைநகர் தில்லியில் தன்னை வரவேற்க ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) குறித்து இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நினைவுகூர்ந்துள்ளார். இத்தாலி பிரதமர் மெலோனி கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு 2 முறை வருகை தந்திருந்தார். அவருடன் இத்தாலியின் துணை பிரதமர் அன்டோனியோ தஜானி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தில்லியில் மெலோனியின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக இந்திய மக்கள் ஏராளமான போஸ்டர்கள் மற்றும் பதாகைகள் வைத்திருந்ததாகவும், அவரது இந்திய பயணத்துக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி, செய்தியாளர் அலெஸாண்ட்ரோ சலூஸ்டி உடன் உரையாடியது குறித்து மெலோனி தனது “ஜியார்ஜியாஸ் விஷன்” எனும் புத்தகத்தில் கூறியதாவது: “நான் சென்றபோது சாலை முழுவதும் சில அடி இடைவெளியில் என் புகைப்படம் மற்றும் வரவேற்பு என்ற சொல்லும் அடங்கிய சுவரொட்டிகள் இருந்தன. நான் அங்கிருந்து புறப்பட்டபோது, அதே படத்தைக் கொண்ட சுவரொட்டிகள் இருந்தன. ஆனால் அவற்றில் வருகை தந்ததற்கு நன்றி எனக் கூறப்பட்டிருந்தது. அப்போது, அங்கு என்னுடன் இருந்த அன்டோனியோ தஜானி இத்தனை சுவரொட்டிகளைப் பார்த்தால் நீங்கள் புது தில்லி தொகுதியில் போட்டியிட்டால் பத்து லட்சம் வாக்குகளைப் பெறுவீர்கள் என்று வேடிக்கையாகக் கூறினார்” என தனது இந்திய பயணத்தை நினைவுகூர்ந்து மெலோனி குறிப்பிட்டுள்ளார். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.