Print Date: Wednesday, 01 July 2026, 05:54 PM
Published On: 2026-06-26 18:10:06
மாநிலங்களவை உறுப்பினராக பிரவீண் சக்ரவர்த்தி பதவியேற்பு... - PTI நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று (ஜூன் 25) பதவியேற்றுக்கொண்டனர். மாநிலங்களவையில் காலியாக இருந்த இடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஜூன் 18 ஆம் தேதிக்குள் ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ஒடிசா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து காலியான 1 மாநிலங்களவை இடத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான தவெகவின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றித் தேர்வானார். ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சனா சதீஷ் பாபு, விஜய் சிண்டகயாலா, பாஷ்யம் ராம கிருஷ்ணா மற்றும் ஜனசேனா கட்சியின் லிங்கமணி ரமேஷ் ஆகியோரும், பாஜகவின் டாய் டகக் (அருணாசலம்), ராஜேஷ் பார்மானந்த் சுக்லா (குஜராத்), டெபாஷிஷ் சமாந்தராய் (ஒடிசா) ஆகியோரும், ஜார்க்கண்டின் பரிமால் நாத்வானி (சுயேட்ச்சை), பைதியாநாத் ராம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) மற்றும் தமிழ்நாட்டின் பிரவீண் சக்ரவர்த்தி (காங்கிரஸ்) உள்ளிட்ட 10 பேரும் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 10 பேருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் ஹிந்தியிலும், ஒருவர் ஆங்கிலத்திலும், ஒருவர் தமிழிலும், மூவர் தெலுங்கிலும் பதவியேற்றுக்கொண்டனர். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.