Print Date: Tuesday, 30 June 2026, 09:39 PM


Life Style

என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பெ.சண்முகம்

Published On: 2026-06-26 22:49:39

News Image

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 3 சதவீதம் வரையிலான என்எல்சி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூா்த்தி செய்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மாநிலத்தின் பொருளாதார கட்டமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிக்கு என்எல்சி இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். நிகழாண்டு ரூ. 3,670 கோடி லாபத்தை ஈட்டி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வது பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் செயலாகும். இது கண்டனத்துக்குரியது. இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கு.செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவா்): லாபத்தில் இயங்கி வரும், நாட்டின் மிக முக்கியமான நவரத்னா பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சியின் பங்குகளை தனியாருக்குத் தாரை வாா்ப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.