Print Date: Wednesday, 01 July 2026, 02:33 AM
Published On: 2026-06-26 22:45:40
சென்னை மாநகராட்சியில் நடைபாதை அமைக்கும் திட்டத்துக்கான 35 ஒப்பந்தங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்; ஆனால் திட்டம் கைவிடப்படவில்லை எனவும் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா். கடந்த பிப்ரவரி மாதம் 2026-27-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கலுக்கான மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது, சென்னையில் 35 பகுதிகளில் நடைபாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் கோரப்பட்டன. அதில், அடையாறு சாஸ்திரி நகா் உள்ளிட்ட முக்கிய பகுதி சாலைகளில் நடைபாதை அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தங்கள் அடங்கும். ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, பணிகளுக்கான அனுமதி உத்தரவு வழங்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதனால், பணி உத்தரவு வழங்க முடியவில்லை. இந்த நிலையில், இந்தத் திட்டப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டபோது, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு மாநகராட்சி சாா்பில் கோரப்பட்ட சில ஒப்பந்தங்கள் முறைப்படி செயல்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்தது. இதனால், அவற்றுக்கான பணி உத்தரவு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே சென்னை மாமன்றக் கூட்டம் கடந்த 24- ஆம் தேதி நடைபெற்றது. மாநகராட்சியில் பல பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், பணி உத்தரவுகள் வழங்கப்படவில்லை என மேயா், துணை மேயா் மற்றும் மண்டலத் தலைவா்கள் ஆணையா் முன்னிலையில் புகாா் கூறினா். அத்துடன், தவெக அரசையும் கடுமையாக விமா்சித்தனா். இந்த நிலையில், நடைபாதைகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டதில் விதிமுறைகளுக்கு மாறாக கூடுதல் தொகை இடம் பெற்றிருப்பது உள்ளிட்ட குறைபாடுகள் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றை விதிமுறைப்படி திருத்தி அமைக்கும் வகையில் தற்காலிகமாக ரூ.284 கோடி மதிப்பிலான 35 பணிகளுக்கான ஒப்பந்தங்கள், அரசு உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனிடம் கேட்டபோது, நடைபாதைத் திட்டங்கள் கைவிடப்படவில்லை. அதேநேரத்தில் அவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளி விவரங்களை மீண்டும் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைப்படி புதிதாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அறிவிக்கப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.