Print Date: Tuesday, 30 June 2026, 09:38 PM


Entertainment

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக விஜய் பட தயாரிப்பாளர் நியமனம்

Published On: 2026-06-26 22:28:41

News Image

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்து உள்ளிட்ட மொழிகளில், திரைப்படங்களை தயாரிப்பவர் வெங்கட் நாராயணா. பெங்களூரு பல்கலையில், பட்டய கணக்காயர் படிப்பை முடித்துள்ளார். முதல்வர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்தை, வெங்கட் நாராயணாவின் கே.வி.என்., நிறுவனம் தயாரித்தது. முதல்வர் விஜய்க்கு நெருக்கமான வெங்கட் நாராயணா, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலர் சாய் குமார் பிறப்பித்துள்ளார். தலைவர்கள் கண்டனம்  தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக, தமிழே தெரியாத, கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நா ராயணாவை நியமித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அன் னை தமிழ் மொழி, கலாசாரத்தை முழுமையாக அறியாத ஒருவரால், தமிழக அரசின் குரலை, டில்லியில் எதிரொலிக்க முடியாது. கர்நாடக முதல்வர் சிவகுமாரின் நண்பரை, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸ் கைப்பாவையாக செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு, முதல்வர் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகம், கர்நாடகம் இடையே, மேகதாது அணை பிரச்னை உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்தவரை, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருப்பது வெட்கக்கேடானது .  அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த பதவி, டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி. இப்பதவியை ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு வழங்கியது, கண்டனத்திற்குரியது.  அ.தி.மு.க., - ஐ.டி., அணி: டில்லி சிறப்பு பிரதிநிதி பதவிக்கு, முதல்வர் விஜயின், வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற தகுதி போதுமா? ஏற்கனவே, மேகதாது அணை பிரச்னையில், த.வெ.க., அரசின் போக்கு தமிழகத்திற்கு எதிராகவே உள்ளது. இந்நிலையில், கர்நாடகத்தை சேர்ந்தவரை, நியமித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்.