Print Date: Thursday, 02 July 2026, 06:35 AM
Published On: 2026-06-26 22:21:42
Jana Nayagan Producer: தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. முற்றிலும் புதிய அரசாக அமைந்துள்ள இந்த ஆட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளனர். தவெக அரசின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் முதலமைச்சரின் தனிச்செயலாளராக ஜெகதீஷை நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பு காலியாக இருந்தது. இந்த சூழலில், இந்த பதவிக்கு ஜனநாயகன் படத் தயாரிப்பாளரான வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசியல் பின்புலம் இல்லாத, தவெக-வில் இல்லாத ஒருவரான வெங்கட நாராயணாவிற்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வழங்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகன் படத் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவிற்கு தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழி தெரியும். தமிழ் அடிப்படை அளவுதான் தெரியும் என்று தெரியவந்துள்ளது. மிகுந்த தொழில் அனுபவம் கொண்ட வெங்கட் கே நாராயணா புகழ்பெற்ற ப்ரிஸ்டிஜ் குழுமத்தின் சிஇஓ-வாக பணியாற்றியுள்ளார். தற்போது கேவிஎன் படக்குழு நிறுவனராக உள்ளார். இவரது தொழில் முழுக்க முழுக்க கர்நாடகாவைச் சார்ந்தே உள்ளது. இவரது நிறுவனம் கன்னடம், தெலுங்கு, இந்தியில் பல படங்களை விநியோகிஸ்துள்ளனர். இவரது நேரடி தயாரிப்பில் சாகத், பை டூ லவ், கல்ட், கேடி தி லவ் படம், பாலன் என்ற மலையாள படத்தையும் தயாரித்துள்ளார். தமிழில் இவரது முதல் தயாரிப்பான ஜனநாயகன் பல சிக்கல்களுடன் இன்னும் வெளிவராமல் உள்ளது. தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் புதிய படமான மெகா 158 படத்தையும் இவரே தயாரித்து வருகிறார். மேலும், கன்னடத்தில் டாக்சிக் படத்தையும் இவரே தயாரித்து வருகிறார். தொழில் அனுபவம், மொழி ஆளுமை கொண்டவராக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கே தொடர்பு இல்லாத ஒருவரை டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருப்பதற்கு கண்டனம் குவிந்து வருகிறது. குறிப்பாக, இவர் கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமாருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. வெங்கட் நாராயணா நியமனத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பாக, முதலமைச்சர் விஜய்யின் தனிச்செயலாளராக ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டிருந்ததற்கு கடும் கண்டனம் குவிந்தது. பின்னர், அவர் மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.