Print Date: Thursday, 02 July 2026, 06:34 AM
Published On: 2026-06-26 22:19:42
புதுச்சேரி: மத்திய அரசால் பிரதமர் தலைமையில் 'PM-RAHAT' என்ற திட்டம் 2026 பிப்ரவரி மாதமே நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் தலைமையிலான அரசு, இதற்கு ஒரு படி மேலே சென்று, கடந்த 2025ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை ஒரு முன்னோடி மாநிலமாகத் தன் யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது. புதுச்சேரியில் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா அவசர சிகிச்சை (Cashless Treatment) வழங்கும் திட்டம், பல்வேறு அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசால் பிரதமர் தலைமையில் ‘PM-RAHAT’ என்ற திட்டம் 2026 பிப்ரவரி மாதமே நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் தலைமையிலான அரசு, இதற்கு ஒரு படி மேலே சென்று, கடந்த 2025ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை ஒரு முன்னோடி மாநிலமாகத் தன் யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது. கடந்த 2026 பிப்ரவரி முதல், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சாலை விபத்து நோயாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தங்குதடையின்றி நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய அமைச்சகம் மூலமாகத் திரட்டப்படுகின்றன. காப்பீடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்காக, பொது காப்பீட்டு கவுன்சில் (GIC) மூலமாக இதுவரை சுமார் ரூ.5.5 லட்சம் பெறப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் வாகனங்களால் பாதிக்கப்படும் வழக்குகளுக்கான நிதி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழியாக நேரடியாக மாவட்ட ஆட்சியரின் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. பயனாளிகள் விவரம்: இதுவரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.12 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 46 விபத்து வழக்குகளுக்கு ரூ.6 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையான பிம்ஸ் (PIMS)-ல் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கான சிகிச்சை நிதியும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன், தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கிய iRAD/eDAR (இணையவழி விபத்து அறிக்கை அமைப்பு) என்ற ஆன்லைன் தளம் மூலம் தடையின்றி செயல்படுத்தப்படுகிறது. காவல்துறை: விபத்து நடந்தவுடன் அதுகுறித்த முழு விவரங்களையும் காவல்துறையினர் இந்த இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் அளிக்கின்றனர். சுகாதாரத்துறை: மாநில சுகாதார முகமை, விபத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சை விவரங்கள் மற்றும் மருத்துவமனைச் செலவுகளைப் பரிசீலிக்கிறது. மாவட்ட நிர்வாகம்: இறுதியாக, மாவட்ட ஆட்சியரின் நேரடி ஒப்புதலின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு நிதி நேரடியாக வழங்கப்படுகிறது. காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளின் சிறப்பான ஒருங்கிணைப்பால் இத்திட்டம் புதுச்சேரியில் தொய்வின்றி இயங்கி வருகிறது. இனிவரும் காலங்களில், புதுச்சேரியில் சாலை விபத்தில் பாதிக்கப்படும் எந்தவொரு நபராக இருந்தாலும், அவர் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா (Cashless) இலவச சிகிச்சையை இத்திட்டத்தின் கீழ் உறுதியாகப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விபத்துக் காலங்களில் விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்கப் பெரிதும் உதவும் எனப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.