Print Date: Wednesday, 01 July 2026, 06:26 AM
Published On: 2026-06-26 22:02:44
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார். இப்போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ராஸ் அடைர் மற்றும் டிம் டெக்டர் ஆகியோர் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதில் டிம் டெக்டர் ஒரு சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். எனினும், காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்துள்ள ஹர்ஷித் ரானா வீசிய இரண்டாவது ஓவரில், ராஸ் அடைர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரில் மற்றொரு முக்கிய விக்கெட் வீழ்ந்தது. ஹாரி டெக்டர் ரன் ஏதும் எடுக்காமல் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அயர்லாந்து அணி 25 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னதாக, இதே ஓவரில் சிவம் துபே ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். பந்துவீச்சை எதிர்கொண்ட டிம் டெக்டர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை துபே பாய்ந்து பிடிக்க முயன்றபோது, அவரது சன்கிளாஸ் உடைந்ததோடு பந்தும் எல்லையைத் தொட்டது. தற்போது கேப்டன் லார்கன் டக்கர் மற்றும் டிம் டெக்டர் ஆகியோர் களத்தில் உள்ளனர். ஆனால் அதன் பிறகு டிம் டெக்டர் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஹர்சித் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இதனால் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அயர்லாந்து இழந்து தடுமாறியது. இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், பெல்ஃபாஸ்டில் நிலவும் மேகமூட்டமான வானிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு முதலில் பந்துவீச தீர்மானித்தார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு எதிர்காலத்தில் தகுந்த நேரம் வரும்போது கண்டிப்பாக வாய்ப்பளிக்கப்படும் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸின் போது தெரிவித்தார். இந்திய அணி மூன்று அதிவேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்-ரவுண்டர் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது.