இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி

துபாய், செப்.21-


‘சூப்பர் 4’ சுற்றில் இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ‘லீக்’ முடிவடைந்ததை தொடர்ந்து ‘சூப்பர் 4’ சுற்று நேற்று தொடங்கியது. ‘சூப்பர் 4’ சுற்றில் துபாயில் நேற்று இரவு நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி, வங்காளதேசத்துடன் மோதியது.


‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ் நல்ல தொடக்கம் அமைத்தனர். ஸ்கோர் 44 ரன்னாக (5 ஓவரில்) இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. பதும் நிசாங்கா 22 ரன்னில் அவுட் ஆனார். சற்று நேரத்தில் குசல் மென்டிஸ் 34 ரன்னில் வெளியேறினார்.


5-வது வீரராக களம் கண்ட தசுன் ஷனகா சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்ததுடன் அணி கவுரவமான நிலையை எட்ட வழிவகுத்தார். 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. தசுன் ஷனகா 64 ரன்களுடனும் (37 பந்து), துனித் வெல்லாலகே ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றியதால் முஸ்தாபிஜூர் ரகுமான், 20 ஓவர் கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான முன்னாள் கேப்டன் ஷகிப் அல்-ஹசனின் (149 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.


பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சைப் ஹசன் 61 ரன்னும், தவ்ஹித் ஹிரிடாய் 58 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%