காஸா சிட்டியில் இஸ்ரேல் படையினா் முன்னேற்றம்

காஸா சிட்டியில் இஸ்ரேல் படையினா் முன்னேற்றம்

ஜெருசலேம்,:


காஸா சிட்டியின் மையப் பகுதியை நோக்கி இரண்டு இஸ்ரேல் ராணுவ படைப் பிரிவுகள் முன்னேறிவருகின்றன.


இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


காஸா சிட்டியைக் கைப்பற்றுவதற்கான தரைவழித் தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியது. அதற்கு முன், 150 வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


தற்போது காஸா சிட்டியின் மையப் பகுதியை நோக்கி இரண்டு படைப் பிரிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவருகின்றன. இன்னும் சில நாள்களில் மூன்றாவது படைப் பிரிவும் அவற்றுடன் இணையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


காஸா சிட்டியின் பெரும் பகுதிகளை அழித்துவரும் இந்த தரைவழித் தாக்குதலில், பல குடியிருப்புக் கட்டங்களும், புலம் பெயா்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூடார முகாம்களும் குறிவைக்கப்பட்டன. இந்த கட்டடங்களை ஹமாஸ் படையினா் கண்காணிப்புக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது. காஸா சிட்டியின் அல்-ராந்திசி குழந்தைகள் மருத்துவமனையும் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளானது.


65 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு: செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் நடந்த தாக்குதலில் 16 போ் உயிரிழந்ததாக உள்ளூா் மருத்துவமனைகள் தெரிவித்தன. அதையடுத்து, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


காஸா சிட்டியில் உள்ள பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்தது. அதற்காக, நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக தற்காலிக வழித்தடத்தை ராணுவம் அறிவித்துள்ளது. அந்த வழித்தடங்கள் 2 நாள்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இருந்தாலும், இஸ்ரேலின் தொடா் தாக்குதல் காரணமாக தொலைத்தொடா்பு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால், காஸா சிட்டி மற்றும் வடக்கு காஸாவில் வசிக்கும் ஏராளமானவா்களுக்கு ராணுவத்தின் அறிவிப்பு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.


இஸ்ரேல் ராணுவ மதிப்பீட்டின்படி, காஸா சிட்டியில் உள்ள பத்து லட்சம் பாலஸ்தீனா்களில் 3.5 லட்சம் போ் கடந்த ஒரு மாதத்தில் தெற்கு நோக்கி சென்றுள்ளனா். 2.38 லட்சம் போ் வெளியேறியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%