ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ராகுல் காந்தி
புதுடெல்லி:
ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “என்னுடைய மைத்துனரை கடந்த 10 வருடங்களாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. இந்த புதிய குற்றப்பத்திரிகை அந்த வேட்டையின் தொடர்ச்சியாகும்.
ராபர்ட், பிரியங்கா மற்றும் அவரது குழந்தைகள் அரசியல் உள்நோக்கம் கொண்ட துன்புறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்கள் அனைவரும் எப்படிப்பட்ட துன்புறுத்தலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தைரியமானவர்கள் என்பதை நான் அறிவேன். அந்த தைரியத்துடனும் கண்ணியத்துடனும் அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். இறுதியில் உண்மை வெல்லும்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: குருகிராம் நில விற்பனை மோசடியில் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போதைய காங்கிரஸ் அரசு, ராபர்ட் வதேராவுக்கு சாதகமாக செயல்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. வதேரா பரிந்துரை செய்தபடி, ஹரியானாவில் பல ஏக்கர் நிலத்தை டிஎல்எஃப் நிறுவனத்துக்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் டிஎல்எஃப் நிறுவனம் ஆதாயம் அடைந்துள்ளது.
டிஎல்எஃப் மற்றும் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் இடையே நடைபெற்ற பண பரிமாற்றங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். பண மோசடி, முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி, பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் ஒரு சொகுசு வீடு வாங்கினார். இந்த வீட்டை கடந்த 2010-ல் ராபர்ட் வதேராவுக்கு விற்பனை செய்தார். இது ஒரு வகையான லஞ்சம். இது தொடர்பாகவும் வதேரா மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 2010-ல் ராஜஸ்தானின் பிகானேரில் 31.61 ஹெக்டேர் நிலத்தை வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது. அப்போதைய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு வதேராவுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.