பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி = உன் அடியார்களை பின்பற்றி அவர்கள் பின்னே திரிந்து
பிறப்பு அறுக்க = பிறவி பிணியை அறுக்க அவர்கள் என்ன தவங்களை செய்தார்களோ
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் = அதே போன்ற ஜெபங்களை நான் செய்து கொண்டேன்
முதல் மூவருக்கும்
அன்னே = பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று சொல்லக்கூடிய மூவருக்கும் அன்னையே
உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே = இந்த உலகிற்கு அருமருந்தாக விளங்கக்கூடிய அபிராமி அன்னையே
என்னே = என்ன உனது கருணையும், பெருமையும்
இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே = என எண்ணி என் வாழ்வில் உன்னை மறவாமல் போற்றி வணங்குவேன்
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று சொல்லக்கூடிய மூவருக்கும் அன்னையாக விளங்க கூடியவளே, உனது திருவருளைப் பெற உன் அடியார்கள் ஆகிய தேவர்கள், முனிவர்கள் எந்தவிதமாக தவங்களை செய்தார்களோ, அதே விதமாக, நானும் பிறப்பை அறுக்கக்கூடிய தவங்களை செய்தேன். இந்த உலகிற்கு அமிர்தமாக, அருமருந்தாக இருக்கக்கூடிய அன்னையே. என்னே! உனது கருணையும் பெருமையும். அவைகளை எண்ணி வியந்து என் வாழ்வில் உன்னை மறவாமல் இருப்பேன்
(தொடரும் /வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை