tamilnadu epaper

எங்கள் ஊர் *பிச்சைமூப்பன் வலசை(ராமநாதபுரம்)* சிறப்பு

எங்கள் ஊர் *பிச்சைமூப்பன் வலசை(ராமநாதபுரம்)* சிறப்பு

 

 

தமிழகத்தில் 13 கடற்கரை மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அதிசயங்கள், அற்புதங்கள் அதிகம் கொண்ட தமிழ் சமூகத்தின் தொன்மை வரலாறு சொல்லும் கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் திகழ்கிறது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே ராமேஸ்வரம், தனுஷ்கோடி, குந்துகால், பாம்பன், மண்டபம், அரியமான், வாலிநோக்கம், தொண்டி என கடற்கரையைக் கொண்ட ஊர்கள் இருந்தாலும், சூழல் கெடாத, அரிய மீன் இனங்கள், பவளப் பாறைகள் அழியாமல் உள்ள *பிச்சை மூப்பன் வலசை கடற்கரைப் பகுதி* யை வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்தினருடன் சேர்ந்து சூழல் சுற்றுலாத் தலமாக உருவாக்கி மக்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்கள்.

 

உலகில் 738 உயிர்கோள காப்பகங்கள் உள்ளன. அதில், இந்தியாவில் உள்ள 18-ல், முக்கியமானது *மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம்*

 

*நாட்டின் முதல் கடல் தேசிய பூங்கா...*

 

பாம்பனுக்கும் தூத்துக்குடிக்கும் இடையே உள்ள 18 தீவுகளுடன் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மன்னார் வளைகுடாப் பகுதியில் 3600 அரிய கடல்வாழ் உயிரினங்களும், 117 வகையான பவளப்பாறைகள், கடல் பாசிகள், 217 வகை கடல் பறவைகள் உள்ளதால் நாட்டின் முதல் கடல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து மீனவ மக்களின் பங்களிப்புடன் கடற்கரைப்பகுதிகளை மேம்படுத்தவும், அதன் மூலம் மக்களை ஈர்த்து மன்னார் வளைகுடாவின் ஆச்சரியங்களை வெளிப்படுத்தும் கடந்த சில ஆண்டுகளாக பல திட்டங்களை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. அப்படி சில ஆண்டுகளுக்கு முன் பிச்சைமூப்பன் வலசை, சூழல் சுற்றுலா தலமாக உருவாக்கபட்டது.

 

*மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை* யின் சார்பில் படகுத்துறை உள்ளது. கண்ணாடி அடித்தளம் கொண்ட படகில் சென்று கடலுக்கு கீழேயுள்ள அற்புதங்களை கண்டுவர வனத்துறையினரால் கொடுமை பையை அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

 

கடலுக்குள் ஆங்காங்கு அமைந்துள்ள மணல் திட்டுகள் அனைவரையும் ஈர்க்கிறது. பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ள பவளப்பாறைகள், பவளப்பாறைக்குள் விதம் விதமான மீன்கள் , நீந்திச்செல்லும் சிப்பிகள், கடல் அட்டை, கடல் குதிரைகள், முத்து சிப்பிகள், பலவகையான சங்குகள் என அனைத்தையும் படகுக்கு கீழே கண்ணாடி வழியாக பார்க்க முடியும்.

 

ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியில் உள்ள அரிய உயிரினங்களையும், இயற்கை பேரிடரிலிருந்து கடலோரப் பகுதியை காப்பாற்றுகின்ற பவளப்பாறைகளை பாதுக்காக்கவும் மன்னார் வளைகுடா பகுதி பாதுக்காக்க்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறை மற்றும் மீன்வளத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

*பவளப்பாறைகளின் சொர்க்கம்...*

 

மன்னார் வளைகுடாப்பகுதியின் சிறப்பம்சமே பவளப்பாறைகள்தான். அதிலும் இந்த பகுதிதான் பவளப்பாறைகளின் சொர்க்கம் என்று கடல் ஆய்வாளர்களாலும், சூழலியலாளர்களாலும் சொல்லப்படுகிறது. சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் கடலோர நிலப்பகுதியை தாக்கி விடாமல் பவளப்பாறைகளே பாதுகாத்து வருகின்றன. அதனால்தான் கடந்த சுனாமி பேரிடரின்போது ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் பல கடற்கரை கிராமங்கள் தப்பியது. அரியவகை மீன்களை, கடல் தாவாரங்களை காப்பாற்றியும், மீன் இனப்பெருக்கத்திற்கும் பவளப்பாறைகளே பேருதவி புரிகின்றன. அதனால்தான் இங்கு கடல்பசுக்கள் நிம்மதியாக இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. அவ்வப்போது டால்பின்கள் வந்து கடலுக்கு மேலே துள்ளி குதித்துவிட்டு செல்லும். அருகில் மாரியூரிலுள்ள புரதானக் கோயிலான பூவேந்திநாதர் கோயிலில் அம்மனின் பெயர் பவளநிறவள்ளியம்மன் என்று வணங்கப்படுகிறது, 

 

*படகு சவாரி..*

 

படகுப்பயணத்தின்போது சுற்றுலாப்பயணிகளுக்கு கடல் பற்றிய விளக்கங்கள் பவளப்பாறைகளின் பயன்கள், கடற்கரையை மாசுபடுத்தாமல் பாதுகாக்கவேண்டிய அவசியம் குறித்தும் வனத்துறையினர் எடுத்துக் கூறினார்கள். கடலில் சில கிலோமீட்டர் தூரம் சுற்றி காட்டிவிட்டு கரையில் இறக்கி விடுகிறார்கள்.

 

பிச்சை மூப்பன் வலசைக்கு காலையில் சென்றுவிட்டு மாலையில் திரும்பி விடலாம். டூ வீலர், ஆட்டோ, கார் மற்றும் நகரப் பேருந்துகளில் செல்லலாம். காற்று அதிகமாகி அலைகள் உரத்து அடித்தால் படகு சவாரி நிறுத்தப்படும் என்பதால் படகு சவாரி செல்ல நினைப்பவர்கள் 78457 01568 என்ற எண்ணில் பேசி கன்பார்ம் செய்துவிட்டு செல்லலாம். இங்கு சென்றுவிட்டு வருகிற வழியில் ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்கள் ஏர்வாடி தர்ஹாவுக்கும், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி கோயிலுக்கும் சென்றுவிட்டு வரலாம்.

 

-கீதா ராஜா சென்னை 41