tamilnadu epaper

சிறு​பான்​மை​யினருக்கு 4% இடஒதுக்​கீடு மசோதா: குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி​னார் கர்நாடக ஆளுநர்

சிறு​பான்​மை​யினருக்கு 4% இடஒதுக்​கீடு மசோதா: குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி​னார் கர்நாடக ஆளுநர்

பெங்​களூரு:

கர்நாடகாவில் அரசின் ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.


கர்நாடகாவில் அரசின் ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா மாநில சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேறியது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2 பி பிரிவில் ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய‌ப்பட்டுள்ளது.


பாஜக எம்எல்ஏக்களின் கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் ஒப்புதலுக்கு காங்கிரஸ் அரசு அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்த ஆளுநர், இந்த திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு நேற்று அனுப்பினார்.


இதுகுறித்து முர்முவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் எழுதியுள்ள கடிதத்தில், "இந்த சட்டத்திருத்த மசோதா இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது. பிரிவு 2-ல் பல சாதிகள் இருப்பினும், முஸ்லிம்களுக்காக தனியாக 2 பி பிரிவு உருவாக்கப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மதத்தின் அடிப்படையில் கருத முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இது சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் அறிவுரை வழங்கினர்.


இந்த திருத்த மசோதா அரசியலமைப்பு சட்ட சிக்கல்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என சந்தேகம் எழுந்துள்ளது. சட்ட சிக்கல்கள் நிறைந்த இந்த மசோதாவை பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிக்கலாமா என வழிகாட்ட வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.