tamilnadu epaper

பேராவூரணி வட்டாரத்தில் “உழவரை தேடி வேளாண்மைத் துறை” திட்டம் துவக்க விழா

பேராவூரணி வட்டாரத்தில் “உழவரை தேடி வேளாண்மைத் துறை”  திட்டம் துவக்க விழா

தஞ்சாவூர், மே.30-

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம், நாட்டாணிக்கோட்டை மற்றும் மாவடுகுறிச்சி கிழக்கு கிராமங்களில், வியாழக்கிழமை “உழவரைத் தேடி வேளாண்மைத் துறை” திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது. பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி வரவேற்றுப் பேசினார். தமிழக முதல்வர், ‘உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தை’ துவக்கி வைத்த காணொலி ஒளிபரப்பப்பட்டது. துவக்க விழாவில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத்துறை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சார்பதிவாளர், விதைச் சான்று அலுவலர், குருங்குளம் சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஆகியோர் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் நாட்டாணிக்கோட்டை மற்றும் மாவடுகுறிச்சி கிழக்கு ஆகிய கிராமங்களில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி, விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். இதில், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் இத்திட்டம் தொடர்பாக சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், நாட்டாணிக்கோட்டை, மாவடுகுறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்றனர். இடுபொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு மானிய விபரங்கள், எடுத்துரைக்கப்பட்டன. தொழில்நுட்பம் சார்ந்த துண்டு பிரசுரங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டன. வேளாண்மை உதவி அலுவலர் கே.கார்த்திகேயன் நன்றி கூறினார்.