tamilnadu epaper

மேற்கு வங்கத்தில் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை டிஸ்மிஸ் ஆசிரியர்கள் பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்கத்தில் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை டிஸ்மிஸ் ஆசிரியர்கள் பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி:

மேற்குவங்கத்தில் மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை, பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


மேற்குவங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 25,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர்களின் பணிநியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. 3 மாதத்துக்குள் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யவும் உத்தரவிட்டது.


இந்நிலையில் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்பட்டதால், 9, 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை, பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்கள் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுவில் தெரிவிக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்கிறோம். 9, 10,11 மற்றும் 12 வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை பணியில் தொடரலாம். மாணவர்களின் தேர்வு முடிவுகள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்துக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.


இந்த நிவாரணம், முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்படாத ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யும் விளம்பரத்தை மே 31-ம் தேதிக்குள் வெளியிட்டு, தேர்வு நடைமுறைகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்பதற்கான பதில் மனுவை மாநில அரசும், பள்ளி கல்வி ஆணையமும் மே 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மே 31-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு விளம்பரத்தை வெளியிடாவிட்டால், தகுந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும். இந்த நிவாரணம் ஆசிரியர் அல்லாத குரூப் சி மற்றும் டி பணியாளர்களுக்கு பொருந்தாது. அந்தப் பிரிவில் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர்.


இவ்வாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.