மும்பை,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி மும்பை தாதரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பானதாக இருக்கும்.
நாடு முழுவதும் மனிதர்களால் நேரடியாக கட்டணம் வசூல் செய்யப்படும் சுங்கச்சாவடிகள் விரைவில் மூடப்படும். மத்திய அரசு விரைவில் புதிய சுங்க கட்டண கொள்கையை அறிமுகப்படுத்தும். தற்போது இதுபற்றி நான் அதிகம் பேச மாட்டேன். புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டால், சுங்க கட்டணம் பற்றி யாரும் புகார் செய்ய எந்த காரணமும் இருக்காது.
டெல்லி- ஜெய்பூர், மும்பை- கோவா நெடுஞ்சாலை பணிகள் என் பதவி காலத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள். டெல்லி- மும்பை நெடுஞ்சாலை சூரத் வழியாக போடப்படுகிறது. இதேபோல சூரத்- சென்னை இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதேபோல சூரத்தில் இருந்து நேரடியாக நாசிக், அகமதுநகர், சோலாப்பூர் மற்றும் தென்பகுதிகளுக்கு செல்ல முடியும். சூரத்தில் இருந்து தென்பகுதிக்கு செல்ல ஒருவர் மும்பை, புனே வரவேண்டிய அவசியம் இருக்காது.
மும்பை- கோவா நெடுஞ்சாலை பணிகளில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. நிலப்பிரச்சினை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தது. எனவே சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதில் முடிவில்லாமல் பிரச்சினைகள் இருந்தன.
எனினும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த சாலை பணி வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும். இது கொங்கன் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.