tamilnadu epaper

4x400m ஒலிம்பிக் தொடர் ஓட்டப் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தகுதி

4x400m ஒலிம்பிக் தொடர் ஓட்டப் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தகுதி

எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 4x400m தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க இந்திய ஆண்கள், பெண்கள் அணி தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகளில் தமிழர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 4x400m ஒலிம்பிக் தொடர் ஓட்டப் போட்டிக்கான தகுதிப் போட்டிகள் பஹாமஸ் தலைநகர் நசாவுவில் நடைபெற்றன. இதில் இந்திய அணிகள் தகுதி பெற்றன.

இதில், மகளிருக்கான போட்டியில் ரூபால் சவுத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ டாண்டி, சுபா வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தகுதிப் போட்டியில் ஜமைக்கா நாட்டு வீராங்கனைகள் முதலிடம் பிடிக்க இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்தது.

அதேபோல் முகமது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ், அமோஜ் ஜேக்கப் அடங்கிய இந்தியர் ஆடவர் அணியும் தகுதிச் சுற்றில் இரண்டாம் இடம் பிடித்தது.

ஆடவர் அணியில் இடம்பெறுள்ள ஆரோக்கிய ராஜீவ், மகளிர் அணியில் சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கெனவே பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகுப் பிரிவு போட்டியில் பங்கேற்க தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றிருந்தார்.

இதுவரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் 19 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.