tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்

ஆடி மாதம் அம்மன் மாதம்

மதுரகாளியம்மன்*, சிறுவாச்சூர் 

 

தன் கணவனை ஆராயாமல் கொன்ற பாண்டியனிடம் நீதிகேட்டு, கோபத்துடன் மதுரையை எரித்தாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது வழியில் இருந்த செல்லியம்மன் கோயிலில் தங்கியிருந்தபோது, அன்றிரவு செல்லியம்மன் தன் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, கண்ணகியிடம் வந்து, “பெண்ணே நீ இங்கு தங்கக் கூடாது” என்றார். காரணம் கேட்ட கண்ணகியிடம், தான் ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருப்பதாகவும், தனது பக்தியால் தன்னிடம் பல வரங்களைப் பெற்ற அவன், தன்னையே அவனுக்கு அடிமையாக்கி விட்டதாகவும் . உனக்கு ஆபத்து என்றும் சொன்னார்.

 

செல்லியம்மனின் நிலையைக் கண்டு கண்ணகி மனம் வருந்தினாள். சற்று நேரத்தில் கோயிலுக்கு வந்த மந்திரவாதி, செல்லியம்மனை வெளியே வருமாறு அழைத்தான். திடீரென அவன் எதிரில் வாளோடு வந்த கண்ணகி, அவன் கழுத்தைத் துண்டித்தாள். வந்தது கண்ணகியல்ல, அவள் உருவத்தில் குடியேறிய காளியம்மன்தான் என்பதை உணர்ந்த மந்திரவாதி அவளிடம் இறுதியாக ஒரு வரம் வேண்டினான். அதன்படி இந்த ஆலயத்தில் தனக்கு ஒரு சமாதி அமைக்கப்பட வேண்டும் என்றும். பக்தர்கள் எல்லாம் அதன்மீது கால் வைத்துவிட்டு அம்மனை தரிசிக்க வர வேண்டும் என்றும். அதுவே தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என்றான்.

 

கண்ணகி உருவில் இருந்த காளியம்மனும் இதற்கு ஒத்துக்கொண்டாள். செல்லியம்மன், கண்ணகியிடம், “இனி இந்த சிறுவாச்சூர் உனக்கானது. மதுரகாளியம்மனாக நீயே இங்கு எழுந்தருள்வாய். நான் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள பெரியசாமிக் குன்றுக்குச் செல்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்’’ என்று கூறி மறைந்தாள்.

 

கண்ணகியும் இதற்கு ஒத்துக்கொண்டாள் எனினும் *வாரத்தில் இரண்டு நாட்கள்* மட்டுமே தான் சிறுவாச்சூரில் இருப்பதாக வாக்களித்தாள். அதனால்தான் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இங்கு பூசை நடக்கிறது. மேலும் பூசையின்போது மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி அதை செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமிக் குன்றின் திசையை நோக்கிக் காட்டிவிட்டு பிறகே மதுரகாளியம்மனின் திருவுருவத்துக்குக் காட்டுகிறார்.

 

பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர்.

 

கீதா ராஜா சென்னை