முதிர்ந்த _ உதிராதக் காதல் அசைவுகள்.
பழுத்த மட்டையைப் பார்த்து பரிகாசம் செய்யும் இளம் மட்டையைப் போன்ற வாழ்வியலை வாழ்ந்து வரும் நிகழ்கால மனிதர்களின் மத்தியில், வயதான முதியவர்களின் மனநிலையை அறிந்து அவர்களின் முதிர்ந்த உதிராதக் காதலை " உதிரிலைகளில் மீந்த பச்சையம் " எனும் கவிதை தொகுப்பில் தெளிவாக காட்சிப் படுத்தியிருக்கிறார் கவிஞர் பழ. புகழேந்தி அவர்கள். உலகெங்கும் சுற்றித்திரிந்தவர்கள் வீடெங்கும் விரவிக்கிடந்தவர்கள், தற்போது ஒரு அறைக்குள் ஒரு கட்டிலுக்குள் அடைபட்டு சிறைவைத்ததைப் போன்ற சூழலில் இருக்கும் வயோதிகர்களின் குரலாக இந்நூல் ஒலிக்கிறது. அந்தளவுக்கு முதிர்ந்த இணையரின் வாழ்வியலை மிகவும் தத்ரூபமான முறையில் பதிவுச் செய்திருப்பது கவிஞரின் எழுத்து முதிர்வை வெளிக்கொணர்கிறது. வயோதிகக் காதலை பல்வேறு நிலைகளில் சொல்லியிருக்கும் கவிஞர், நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் வயோதிகர்களின் உணவாக மாத்திரைகளைச் சுட்டிக் காட்டவும் செய்திருக்கிறார்.
" சாப்பிட்டாயா?
என நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்
மாத்திரைகளைத்தான். "
_ இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் மாத்திரைகளைத் தான் உணவாக உட்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக முதியவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மாத்திரைகளால் தான் அவர்களுக்கான நாட்கள் நகர்கின்றன. இருப்பினும் கவிஞரோ மாத்திரைகளுடன் வயோதிகத்தை நகர்த்தும் இணையரின் காதலையும் சேர்த்துக் காட்சிப்படுத்தியிருப்பது நிகழ்கால சூழலாகவும் உண்மைத்தன்மை உடையதாகவும் இருக்கிறது.
குழந்தைகள் சிறுவர்கள் இளையவர்கள் பெரியவர்கள் காலையில் தாமதமாக துயில் களைவதற்கு பலக்காரணங்கள் இருக்கலாம். அவர்கள் சற்று நேரம் தூங்கினால், நேரமாகுது ஏந்திரிங்க என்று சொல்வது அனைவரது வீட்டிலும் நடக்கும் எதார்த்தமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். ஆனால் அதிக வயதான வயோதிகர்களின் உறக்கம் சற்று நேரம் தொடர்ந்தால், உடனே மூக்கின் மீது விரலை வைத்து அவர்களுக்கு சுவாசம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பது மனக் கசப்பான செயலாக இருந்தாலும் அவ்வாறு பார்க்கத்தாம் செய்கிறோம். இதனையே கவிஞரும்,
" இன்றோ
நீ எழத் தாமதித்தால்
மூக்கருகில் விரல் வைத்துப் பார்க்கிறேன்.
பிறகே மீள்கிறது
என் சுவாசம். "
_ என்று வயோதிக இணையரில் ஒருவரின் சுவாசம் இருக்கும் நிலையில் தான், மற்றொருவரின் சுவாசமும் மீள்வதாக உணரச் செய்கிறார். மேலும் வயோதிகர்களின் தனிமையின் கொடுமையை வலியை துயரத்தை, அவரவர்களே ஆறுதல் சொல்லிக் கொண்டால் தான் உண்டு. இல்லையேல் இதன் துயரம் தொடரும் என்பதையும் உணர்த்துகிறார்.
" பார்த்துப் போக மட்டும்
யாரும் வராததால்
பார்த்துக் கொள்கிறோம்
என்னை நீயும்
உன்னை நானும். "
_ தேவையான பொருட்கள் அனைத்தும் இருந்து என்னப்பலன்? அப்பொருட்களை தேவைப்படும் போது எடுத்துக் கொடுக்க ஆளில்லாமல். இவ்வாறான பொருட்கள் இருந்தாலென்ன? இல்லையென்றால் என்ன?. மனதிற்கு ஆறுதல் இல்லாத நிலையில், மருந்து மாத்திரைகள் என்னச் செய்யும். இன்னும் இதுபோல பல வினாக்களை உண்டுபண்ணும் வகையில் பல கவிதைகளை காதல் உணர்வோடும் அன்பின் வெளிப்பாடோடும் தனிமையின் துயரோடும் ஏக்கத்தின் எதிர்பார்ப்போடும் " உதிரிலைகளில் மீந்த பச்சையம் " எனும் கவிதை தொகுப்பை வடித்திருக்கிறார் கவிஞர் பழ.புகழேந்தி அவர்கள். வயோதிக இணையரின் காதல் தேடல் ஏக்கம் எதிர்பார்ப்பு விட்டுக்கொடுத்தல் தியாகம் எனப்பல சுவடுகளால் உருவாகியுள்ள இந்நூல், இலக்கிய உலகில் தடம் பதித்து முழுமையடையும் என்று வாழ்த்தி வணங்குகிறேன்.
வாசிப்பு : மா.செல்வகுமார், கல்லூர், கும்பகோணம். 99448 86468
நூல் : உதிரிலைகளில் மீந்த பச்சையம்
ஆசிரியர் : பழ.புகழேந்தி
வகை : கவிதை
வெளியீடு : மௌவல் பதிப்பகம்
பக்கம் : 96
விலை : 130
தொடர்புக்கு : 97877 09687