tamilnadu epaper

உறவுகள் வேண்டும்

உறவுகள் வேண்டும்


அந்தப் பதினான்கு வயது பெண் மேட்ரி மோனி தளத்திற்கு வந்தருந்தாள். ஆட்டோவில் ஏறி இறங்கி விட்டாள். அங்கு வந்து ஏற்கெனவே பல கனவுகளுடன் அமர்ந்திருந்த பெண்வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் இவளை அதிசயமாக பார்த்தனர்.


"பிஞ்சிலேயே பழுத்துருச்சு போல" ஒருத்தி சொன்னாள். (என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு).


"ஆமாமாம், வீட்டுக்கடங்காததா இருக்கும்" இன்னொருவள் சொன்னாள்.


அட்டெண்டர் வந்து பெயர் கேட்டதும் சுகன்யா என்றாள். ஒரு விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னதும் வாங்கி எழுத ஆரம்பித்தாள்.


என் அப்பாவிற்கு மனைவியும், எனக்கு நல்ல அம்மாவும் கூடவே தம்பியும் வேண்டும் என்று எழுதியிருந்தாள்.


உள்ளே 'மணப்பந்தல்' நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீராம் சாருக்கு விண்ணப்பத்தை பார்த்ததும் ஆச்சர்யம்.


"முதலில் அந்தப் பெண்ணை கூப்பிடுப்பா" என்றார்.


உள்ளே வந்த சுகன்யா, வணக்கம் சொன்னாள். அதன் பிறகு தன்னுடைய நாற்காலியில் ஏறி நன்கு பின்னால் தள்ளி முழுவதுமாக உட்கார்ந்து கொண்டாள்.


"சொல்லுமா, எதுக்காக வந்துருக்க"? கேட்டதும் சுகன்யாவிற்கு சட்டென கண்களில் கண்ணீர் வந்தது.


"சார் எனக்கு ஒரு அம்மா தம்பியுடன் வேண்டும்" என்றாள்.


"என்னோட சின்ன வயசிலேயே எங்கம்மா சாமிகிட்ட போய்ட்டாங்க. அப்பாவும் பாட்டியும் தான் இருந்தாங்க. பாட்டியும் போன வருஷம் இறந்துட்டாங்க" கொஞ்சம் நிறுத்தினாள்.


ஸ்ரீராம் சார் அவளுக்கு குடிக்க நீர் கொடுத்தார்.


மீண்டும் ஆரம்பித்தாள். "எங்க பிளாட்டில எதிர்த்த போர்ஷன்ல புதுசா ஒரு குடும்பம் வந்துருக்காங்க. எப்பப் பார்த்தாலும் யாரானும் உறவுக்காரங்க வந்துட்டே இருக்காங்க" என்றதும்


ஸ்ரீராம் சார் இடைமறித்து "அது உனக்கு இடைஞ்சலா இருக்காமா"? என்றார்.


"ஐயோ இல்ல சார். அவங்க வீட்டில பொறந்திருக்கலாம்னு இருக்கு சார்" என்றாள்.


அத்தை, மாமா, சித்தப்பா, சித்திகள் என்றும், அவர்களின் குழந்தைகளும் சேர்ந்து வருவதும், போவதும் இவளுக்கு ஆச்சர்யமாக இருப்பதாக சொன்னாள்.


தாத்தா பாட்டி உட்கார்ந்து பேரப்பிள்ளைகளுக்கு கதை செல்வதையும், சாதம் ஊட்டுவதையும் சொன்னாள்.


இவளுக்கு ஆசை இருந்தாலும், அவர்கள் கூப்பிட்டாலும் இவளால் ஒட்டிக்கொள்ள முடியவில்லை. தெரியவில்லை என்றாள்.


அவள் பேசப் பேச குழந்தையின் ஆர்வமும், ஆதங்கமும், அடிமனதின் வேதனையும் நன்கு புரிந்தது ஸ்ரீராம் சாருக்கு.


எழுந்து குழந்தையின் முதுகை தடவிக் கொடுத்தார். மெல்ல அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.


உள்ளே நடந்த எல்லாவற்றையும் எல்லோருக்கும் கேட்கும் விதமாக ஒன்று விடாமல் சொன்னார்.


வந்திருந்த எல்லோருக்குமே சுகன்யா மீது ஒருவித பச்சாதாபம் ஏற்பட்டது.


வாசலில் ஆட்டோவில் ஏற்றிவிட்டு வீட்டுக்கு பத்திரமாக செல்லும்படியும், மாலையில் போன் செய்வதாகவும் சொன்னார்.


ஸ்ரீராம் சாரின் துரித தேடுதலினாள் சுகன்யாவிற்கு அழகான, அன்பான அம்மாவும், செல்லத் தம்பியும் கிடைத்தனர்.


அப்பாவுடனும் அம்மாவுடனும் யாரும் பிறக்காததால் தனக்கு பெரிய சொந்தங்கள் இல்லை என்று வருத்தப்பட்டாள்.  


இதோ தம்பி கிடைத்துவிட்டான். வருங்காலத்தில் இவர்கள் வீட்டிலும் அத்தை மாமா என்று உறவுகள் கலகலத்திருக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருந்தாள்.


அம்மாவிடம் கொஞ்சிக்கொள்வதும், அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்ளும்போது பெருமிதம் கொள்வதும், தம்பிக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதும், தோளில் கைபோட்டு அணைத்து பள்ளிக்குக் கூட்டிச் செல்வதும் அப்பப்பா என்னென்று சொல்வது?


சந்தோஷம் நம் கையில்தான் இருக்கிறது. அனுபவிக்க வேண்டும். இறுக்கமாக வாழாமல் இதமாக வாழப் பழகிக்கொள்வோம்.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்.