எங்கள் ஊர் கோத்தகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த ஓர் அழகிய ஊராகும் . மேட்டுப்பாளையத்திலிருந்து 32 கிமீ தொலைவிலும் உதகமண்டலத்திலிருந்து 26 கிமீ தொலைவிலும் குன்னூரிலிருந்து 20 கிமீ தொலைவிலும் எங்கள் ஊர் அமைந்துள்ளது.கிரி = மலை; கோத்தர்கள் வசிக்கும் மலை என்பதால் கோத்தகிரி என வழங்கப்படுகிறது. கோத்தர்களின் தாயகப் பகுதி எனும் பொருளில் கோத்தகிரி என வழங்கப்படுகிறது.
கோத்தர்கள் என்போர் தோடர்களைப் போன்ற பழங்குடியின மக்கள் ஆவர். கோத்தர்கள் திருச்சிக்கடி என்ற ஊரிலும், நீலகிரியின் சிற்சில இடங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களே கோத்தகிரி மண்ணின் மைந்தர்கள் ஆவர். இதற்குச் சான்றாக
கோத்தகிரி நேரு பூங்காவில் கோத்தர்களின் பழமையான ஐனோர் கோவில் விளங்குகிறது. நீலகிரியின் பூர்வக்குடிகளாக தோடர்கள்,கோத்தர்கள், இருளர்கள் போன்ற மக்களே விளங்குகின்றனர். கன்னட, மலையாள,படுக,தெலுங்கு, தமிழ் மக்கள் போன்றோர் நீலகிரிக்குப் பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் புலம்பெயர்ந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களே ஆவர். இப்பழங்குடியின் இடத்தில் இப்போது புலம்பெயர்ந்த மக்களாக உள்ளனர். வெள்ளையர்கள் வருகை நீலகிரிக்கு வரும் முன்பு பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் இப்பழங்குடி மக்களின் வாழ்வு இன்று நலிந்து வருவது குறிப்பிடத்தக்கது
30.93 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட கோத்தகிரி பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
கொடநாடு காட்சி முனை,
கேத்தரின் அருவி,
சல்லிவன் நினைவகம்,
உயிலட்டி நீர்வீழ்ச்சி (கூக்கல்துறை நீர்வீழ்ச்சி),
லாங்வுட் சோலைக்காடுகள் (பாதுகாக்கப் பட்ட சூழியல் மேம்பாட்டு வனப்பகுதி போன்ற பகுதிகள் எங்கள் கோத்தகிரிக்கு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் ஆகும். இவை பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்கள் ஆகும்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
கோத்தகிரி வட்டத்தில் அமைந்த கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கோத்தகிரியில் இயங்குகிறது.
கோத்தகிரியின் சிறப்புகளில் ஒன்று கேத்தரின் அருவியாகும். அடர்ந்த பசுமையான காடு, சம வெளியில் தேயிலைத் தோட்டம் இரட்டை அருவி ஆகியவைகளை சேர்த்து வரைந்தால் கேத்தரின் அருவியின் அழகை ஓரளவு ஒரு ஓவியத்தில் அடக்கலாம்.
கோத்தகிரியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. மலைவாசஸ்தலங்களில் காபி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் தோட்டங்களை அறிமுகப்படுத்திய ஸ்காட்டிஷ் தோட்டக்காரரான எம் டி காக்பர்னின் மனைவியின் நினைவாக கேத்தரின் என்று பெயரிடப்பட்டுள்ளது. 76.2 மீஉயரத்திலிருந்து பிறக்கும் இந்த அருவி, உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும். இந்த நீர்வீழ்ச்சி இரண்டு படிகளில் கீழே விழுகிறது. இப்பகுதியில் உள்ள பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் மேல் நீர்வீழ்ச்சிக்கு கல்லார் ஆற்றின் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. அமைதியான அழகுக்காகவும் குறிப்பிடப்படும் இரண்டாவது வீழ்ச்சியும் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க டால்பின் மூக்கு சிறந்த காட்சிக் கூடங்களில் ஒன்றாகும். அரவேனுவில் பிரிந்து செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் நீங்கள் கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு நேராக செல்கிறீர்கள். உங்கள் வருகையைத் திட்டமிடும்போது வானிலை அமைதியாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிறந்த நேரம் காலை மற்றும் மதியம் மற்றும் அதற்கேற்ப உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள். இந்த நீர்வீழ்ச்சியின் வசீகரிக்கும் சுற்றுப்புறக் காட்சியானது ஒரு நாளைக் கழிக்க ஒரு மயக்கும் இடமாக அமைகிறது.
நீலகிரியின் வனப்பு உதகமண்டலம் மற்றும் குன்னுரோடு முடிந்துவிடவில்லை கோத்தகிரியிலும் அது தொடர்கிறது. கோத்தகிரி மலைகளின் விசித்திரமான காற்றில் நிதானமாக ஓய்வெடுக்கலாம் மலையேற்றம் முதல் பாறை ஏறுதல் வரை கோத்தகிரியில் நமது பயணத்தை மறக்க முடியாததாக மாற்ற ஏராளமான இடங்கள் உள்ளன.
பசுமையான புல்வெளிகள், ஆடம்பரமான தோட்டங்கள் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட கோத்தகிரி, சிறிது ஓய்வு நேரத்தை செலவிட சிறந்த இடமாகும். எல்க் நீர்வீழ்ச்சி, தொட்டபெட்டா மலைத்தொடர் மற்றும் ரங்கசுவாமி தூண் ஆகியவை அந்த இடத்தை சுற்றியுள்ள மற்றொரு சிறப்புகளாகும்.மூடுபனி மூடிய மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அற்புதமான காட்சியாகும். கோத்தகிரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உயிலத்தி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது எல்க் அருவி. அருவியை சுற்றியுள்ள பகுதிகளின் பசுமை வசீகரிக்கும் அழகு என்பதில் சந்தேகமில்லை.
கோத்தகிரி அதன் அற்புதமான மலையேற்றப் பாதைகளால் சாகசப் பயணிகளின் அருமையான தேர்வாக இருக்கும். ஓடிவரும் ஆறுகள் தேயிலைத் தோட்டங்கள் பசுமையான சூழல் நம் மனதுக்கு இதமாக இருக்கும்.
கோத்தகிரி சுற்றுலா வருவதற்கு சிறந்த மாதங்கள் டிசம்பர் முதல் மே மாதம் வரை. குளிர் காலத்தில் வானிலை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
கோத்தகிரியின் மிகவும் பிரபலமான ஒன்று கோடநாடு காட்சி முனை ஆகும். அங்கிருந்து நீலகிரி மலைகளின் அழகை ரசிக்கலாம். முக்கிய கோத்தகிரி நகரத்தில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவில் உள்ளது.
நேரு பூங்கா கோத்தகிரி நகரத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தனியார் பூங்கா பயணிகளுக்கு ஓய்வு நேரத்தை கழிப்பதற்கான பல நடவடிக்கைகளை கொண்டுள்ளது.
இந்தப் பூங்காவினுள் கோத்தகிரியின் பூர்வீக குடிகளான கோத்தர்களின் கோயில் ஒன்று உள்ளது. இந்தப் பூங்காவினுள் மக்கள் கூடுவதற்கான மையம் ஒன்றும் , தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவாக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றும் உள்ளது.
பொதுமக்கள் உபயோகத்திற்கான விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. வெள்ளப் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்ட அரங்கம் ஒன்று உள் விளையாட்டு அரங்காக பயன்படுகிறது.
இந்தப் பூங்கா முக்கியமாக பல கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கும் உள் விளையாட்டு அரங்கமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் பூக்களின் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்தக் கண்காட்சி நீலகிரியில் மட்டுமே வளரும் பல அரிய வகைப் பூக்களை , குறிப்பாக அரிய வகை ரோஜாக்களை பார்வைக்கு வைப்பதற்கு பெயர் பெற்றது. சமீப காலமாக கோத்தகிரியில் விளையும் அரிய காய்கறி வகைகளை பார்வைக்கு வைப்பதற்காக காய்கறி கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
கோத்தகிரியில் சுவிட்சர்லாந்து நாட்டில் நிலவும் சீதோஷ்ண காலநிலை நிலவுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை விவசாயத்தையே நம்பி உள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பச்சை தேயிலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
கோத்தகிரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தினால், உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கோத்தகிரி மக்களின் வாழ்வாதாரம் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மிகவும் பழமையானதும் புகழ்பெற்றதும் ஆகும். இங்கு ஆண்டுதோறும் 22 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.