tamilnadu epaper

குமரியில் ஒதுங்கிய கண்டெய்னரில் பொருட்கள் மீட்கும்பணி தீவிரம்

குமரியில் ஒதுங்கிய கண்டெய்னரில்  பொருட்கள் மீட்கும்பணி தீவிரம்


கன்னியாகுமரி, ஜூன்3

குமரி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கண்டெய்னரில் இருந்து பொருட்களை மீட்கும் பணி மும்முரமாக நடக்கின்றன. 36 கடற்கரை கிராமங்களை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கின்றனர். 

கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் 24ம் தேதி மூழ்கியது. அதில் இருந்த 640 கண்டெய்னர்களில் பல கடல் பகுதிகளில் மிதந்தும், கரைஒதுங்கியும் வருகிறது. 

 இதில் ஒரு கண்டெய்னர் குமரி மாவட்டம் வாணியக்குடி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த கண்டெய்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து குமரி கலெக்டர் அழகுமீனா நேற்று அளித்த பேட்டி:

 குமரியில் கரை ஒதுங்கிய கண்டெய்னரில் பிளாஸ்டிக் துகள் அடங்கிய மூட்டைகளே அதிகம் உள்ளன. தூத்துக்குடி கஸ்டம்ஸ் உதவியுடன் மீட்கப்பட்டது. அதிலிருந்து 25 கிலோ கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் துகள்கள் 460 மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இதை மீட்கும் பணியில் 439 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை மணலுடன் பரவிய பிளாஸ்டிக் பொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது. மரக்கட்டைகள், முந்திரி பருப்பு போன்றவையும் கண்டெய்னர்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அதே நேரம் காஸ், ஆயில் ஏதும் குமரி கடலில் கலக்கவில்லை.

தேங்காய்பட்டணத்தில் இருந்து மணக்குடி வரை 36 கடற்கரை கிராமங்களில் கண்டெய்னரில் இருந்து வெளியான பொருட்கள் கரை ஒதுங்கி வருகிறது. எனவே 36 கடற்கரை கிராமங்களையும் தினமும் ட்ரோன் மூலம் சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர்கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியாரின் நேர்முக உதவியாளர்(பொது) சுகிதா, மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.